நீதிமன்றங்களில் முன் ஜாமீன் கோரும் திமுகவினர்: தலைமை கண்டனம்
சென்னை:
தமிழகம் முழுவதும் ஏராளமான திமுகவினர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றங்களில் மனு செய்ய ஆரம்பித்துள்ளனர்.இதைத் தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு திமுக தலைமை கோரிக்கை விடுத்துள்ளது.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் திமுகவின் முக்கியப் புள்ளிகள் மட்டுமின்றி தொண்டர்கள் மீதும் வழக்குகள்போடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தா.கிருட்டிணன் கொலையில் தொடர்ந்து திமுகவினர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட வண்ணம் உள்ளன.
இதனால் எப்போது வேண்டுமானாலும் ஏதாவது ஒரு வழக்கில் தாங்கள் கைதாகலாம் என்ற உணர்வு திமுகதொண்டர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து பல்வேறு நீதிமன்றங்களிலும் முன் ஜாமீன் கேட்டுதிமுகவினர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து திமுக சட்டப் பிரிவுச் செயலாளரான ஆர்.எஸ். பாரதி மூலம் கட்சித் தலைமை ஒரு அறிக்கையைவெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
அதிமுக அரசு பொய் வழக்குப் போட்டு திமுகவினரைக் கைது செய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நம்கட்சியினர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றங்களை நாடி வருகிறீர்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.
ஜெயலலிதா போடும் பொய் வழக்குகளை தைரியமாகச் சந்திக்க முன் வர வேண்டும். அதை விட்டுவிட்டு முன்ஜாமீன் கேட்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
கொலை முயற்சி வழக்கில் தா.கி. குடும்பத்தினர்:
இதற்கிடையே தா.கிருட்டிணனின் குடும்பத்தினர் மீதும் கொலை முயற்சி வழக்கு உள்ளதாக திமுக தலைவர்கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் கொலைக்கு முயற்சிக்கும் தா.கி. கொலைக்கும் சம்பந்தம் இருக்கலாம்என்றும் அவர் கூறியுள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, 2000மாவது ஆண்டு சிவகங்கை மாவட்டம் அரசனூர் என்றஇடத்தில், முனுசாமி என்பவர், போலீஸில் கொடுத்த புகாரில், தா.கிருட்டிணனின் தம்பி ராமையாவும், வக்கீல்இளங்கோ என்பவரும் தன்னைக் கொல்ல முயற்சி செய்ததாகவும், அவர்களிடமிருந்து தப்பி வந்து விட்டதாகவும்கூறி புகார் கொடுத்தார்.
அது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, ஆண்டிப்பட்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில்பேசிய ஜெயலலிதா, தா.கியின் தம்பி என்பதால் வழக்கு விசாரணையை திமுக தாமதப்படுத்துவதாக புகார்கூறினார்.
இதைத் தொடர்ந்து வழக்கு துரிதப்படுத்தப்பட்டது.
குற்றவாளிகளாக உள்ள அவர்களே இன்று அழகிரி மீது குற்றம் சாட்டுவது வியப்பாக உள்ளது என்றார்கருணாநிதி.
இதற்கு ராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயா டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், தன மகன்அழகிரி மீது கொலைப் பழி விழுந்துள்ளதால் எங்கள் குடும்பத்தினர் மீதும் கொலைப் பழியைப் போட கருணாநிதிமுயல்கிறார். தொடர்ந்து இது போல அவர் பேசினால் சில உண்மைகளை வெளியிட வேண்டியிருக்கும். அதுதிமுகவுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார்.