சென்னையில் குடிநீர், மின்சாரம், பஸ் வசதி கோரி 5,000 பேர் சாலை மறியல்
சென்னை:
சென்னை, கண்ணகி நகர் பகுதியில், குடிநீர், மின்வசதி, பஸ் வசதி கோரி 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்சாலை மறியல் செய்தனர். இதனால் பழைய மகாபலிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துரைப்பாக்கம் அருகே உள்ள கண்ணகி நகரில் தமிழ்நாடு குடிசை வாரியத்திற்குச் சொந்தமான அடுக்குமாடிக்குடியிருப்புகள் உள்ளன. இங்கு 5,000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள்.
சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புக் குடிசைகள் அகற்றப்படும்போது, அதில் வசித்த அ மக்கள்அனைவரும் இங்குதான் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
ஆனால், இந்தக் குடியிருப்புகளில் மின் வசதி கிடையாது. குடிநீருக்கும் கடும் பஞ்சம் நிலவுகிறது. அதேபோல, பஸ்வசதியும் கிடையாது. 2 கிலோமீட்டர் நடந்து சென்றால் தான் பஸ்ஸைப் பார்க்க முடியும்.
இந்த வசதிகளை செய்து தரக் கோரி கண்ணகி நகர் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந் நிலையில் காலை திடீரென சாலை மறியலில் இறங்கினர். இதனால் பழைய மகாபலிபுரம் சாலையில்,போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்தச் சாலையில்தான் முக்கியமான சாப்ட்வேர் நிறுவனங்கள், தனியார் கல்லூரிகள், ஆவின் நிறுவனம் உள்ளிட்டபல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. காலை நேரத்தில் சாலை மறியல் நடந்ததால் இப் பகுதியில்பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வேலைக்குச் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து பொது மக்களை சமாதானப்படுத்தினர். ஆனால் உரிய நடவடிக்கைஎடுக்கும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக பொதுமக்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்த பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்த பிறகே போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.