ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் தீ விபத்து
ஸ்ரீஹரிகோட்டா:
தமிழக- ஆந்திர எல்லையில்ல ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ராக்கெட்ஏவுதளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இந்த விபத்து ஏற்பட்டது. ஆனால், முழுமையாக ரகசியம் பாதுகாக்கப்படும் இடம் என்பதால் உடனே இந்தவிவரம் வெளியில் தெரியவில்லை. இன்று தான் இத் தகவல் வெளியாகியுள்ளது.
சதீஷ் தாவன் ராக்கெட் ஏவு தளத்தின் லாஞ்ச் பேடுக்கு மிக அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த லாஞ்ச்பேடில் இருந்து தான் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை இந்தியா செலுத்தி வருகிறது.
ராக்கெட் தளத்தைச் சுற்றிலும் வனப் பகுதி என்பதால் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டதாக இஸ்ரோ வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. ராக்கெட் தளத்தின் கேபிள்களுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களுக்கும் இந்தத் தீ பரவியது.ஆனால், கேபிள் சேதமடையும் முன்பாகவே தீ அணைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இப் பகுதியில் கடும் வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படுவது சர்வ சாதாரணம் என்றும், நேற்று ஏற்பட்டது மிகச்சிறிய தீ விபத்து தான் என்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னையில் இருந்து வடக்கே 100 கி.மீ. தொலைவில் இந்த மையம் அமைந்துள்ளது.