பொடாவை வாபஸ் பெற முடியாது: பா.ஜ.க
சென்னை:
பொடா சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் வெங்கையாநாயுடு கூறினார்.
பா.ஜ.கவின் மாநில பொதுக் குழுக் கூட்டம் இன்று திருப்பூரில் தொடங்கியது. திமுகவுடனான உறவு- மோதல்குறித்து விரிவாக இதில் விவாதிக்கப்படவுள்ளது. இக் கூட்டத்தில் பங்கேற்க நாயுடு இன்று திருப்பூர் செல்லும்வழியில் சென்னை வந்தார்.
சென்னை நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொடா சட்டத்தை பா.ஜ.க. மட்டும் கொண்டுவரவில்லை. அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த சட்டத்தைக் கொண்டுவந்தோம்.
அப்போது இந்த சட்டத்தை ஆதரித்த கூட்டணிக் கட்சிகள் இப்போது எதிர்ப்பது கூட்டணி தர்மத்திற்கு முரணாணது.பொடா சட்டம் நாட்டுக்கு மிகவும் அவசியமானதாகும். எனவே பொடவை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கேஇடமில்லை.
பொடாவுக்கு எதிராகசிறை நிரப்பும் போராட்டம் நடத்த கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசுக்குஎதிராக அவர் போராடச் சொல்லவில்லை. பொடாவுக்கு எதிராகத் தான் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
பொடா தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவே மறுபரிசீலனைக் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டிதனது பரிந்துரையை விரைவில் தர வேண்டும் என்றார் நாயுடு