கண்ணப்பனை கைது செய்ய வாஜ்பாய் தடை: டெல்லி பயணத்தை ரத்து செய்தார் ஜெ
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது டெல்லி பயணத்தை திடீர் என ரத்து செய்துவிட்டார்.
துணைப் பிரதமர் அத்வானியின் மகன் ஜெயந்த்தின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று (சனிக்கிழமை) ஜெயலலிதா டெல்லி செல்ல இருந்தார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெள்ளிக்கிழமை இரவில் வெளியிட்டது.
மகன் திருமணத்தில் பங்கேற்க வருமாறு ஜெயலலிதாவை அத்ாவனியே தொலைபேசியில் அழைத்ததாகவும் இதையடுத்து சனிக்கிழமை டெல்லி சென்றுவிட்டு அன்று இரவே முதல்வர் சென்னை திரும்புவார் எனவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
மேலும் டெல்லியில் இருந்து திரும்பும் வழியில் ஹைதராபாத் சென்று, நக்சலைட்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி காயமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்துவிட்டு ஜெயலலிதா சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து காலையிலேயே பல அமைச்சர்களும் விமான நிலையம் வந்துவிட்டனர். ஆனால், மாலை 4 மணிக்குத் தான் முதல்வரின் சிறப்பு விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் வீடுகளுக்குத் திரும்பினர். இதையடுத்து மீண்டும் 3.15 மணிக்கு அனைத்து அமைச்சர்களும் விமான நிலையம் வந்துவிட்டனர்.
ஆனால், மணி 4.30 ஆகியும் முதல்வர் வரவில்லை. இதனால் அமைச்சர்கள் குழம்பிப் போய் நின்றிருந்தனர். இதையடுத்து 5 மணியளவில் தான் ஜெயலலிதா தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பட்டாளம் வீடுகளுக்குத் திரும்பியது.
மதிமுக மத்திய அமைச்சர் கண்ணப்பனைக் கைது செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்ததால் கோபமடைந்த ஜெயலலிதா தனது டெல்லி பணத்தை கடைசி நிமிடத்தில் ரத்து செய்தாகக் கூறப்படுகிறது.