For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்வானியுடன் பேச முயன்ற ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மத்திய அமைச்சர் கண்ணப்பனைக் கைது செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்ததையடுத்து கடுப்பான முதல்வர் ஜெயலலிதா துணைப் பிரதமர் அத்வானியுடன் பேச முயன்றதாகவும், ஆனால் அது முடியாமல் போய்விட்டதாகவும் தெரிகிறது.

புலிகளை ஆதரித்ததற்காக கண்ணப்பனை பொடாவில் கைது செய்யப் போவதாகவும், அதற்கு வசதியாக அவரை பதவியை விட்டு நீக்குமாறும், அவ்வாறு நீக்காவிட்டாலும் கூட கைது உறுதி எனவும் பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் கடிதம் எழுதினார்.

இதையடுத்து பிரதமரைச் சந்தித்த கண்ணப்பன் தனது தரப்பு நியாயத்தை விளக்கி ஒரு கடிதம் கொடுத்தார்.

இந்த இரு கடிதங்களையும் சட்ட அமைச்சகதத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார் வாஜ்பாய்.

இந்தக் கடிதங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் ஜெயலலிதா அனுப்பிய கடிதம், ஒரு பிரதமருக்கு முதல்வர் எழுதும் கடிதம் போல இல்லை, அது மிகக் கடுமையாக உள்ளது. இதனால் மிகக் கடுமையாகவே பிரதமரும் பதில் அனுப்ப வேண்டும் என பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக பிரதமரின் ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா, ஜெயலலிதாவின் கடிதம் கண்டு படு கோபமடைந்ததாகவும், கண்ணப்பனைக் கைது செய்ய அனுமதிக்கவே கூடாது என்று கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

இதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை (சனிக்கிழமை) தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கண்ணப்பனின் பேச்சு பொடா சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதா இல்லையா என்று சட்ட அமைச்சகம் ஆராய்ந்து கொண்டுள்ளது. சட்ட அமைச்சகத்தின் பதில் கிடைக்கும் முன் அவரைக் கைது செய்து நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு வீணாக ஊறு விளைவிக்க வேண்டாம். தமிழக அரசு அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்தத் கடிதத்தைக் கண்டு கடும் கோபமடைந்த முதல்வர் அது குறித்து துணைப் பிரதமர் அத்வானியுடன் பேச முயன்றதாகவும், ஆனால் அவர் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பரபரப்பாக இருந்ததால் அவருடன் பேச ஜெயலலிதாவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.

இது குறித்து அத்வானியுடன் பேச பலமுறை முயன்றும் முடியாமல் போனதால், கடைசி நேரத்தில் தனது டெல்லி பயணத்தை முதல்வர் ரத்து செய்தார் என்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X