மலேசியா: பதவி விலகினார் மகாதிர்- பிரதமரானார் அப்துல்லா
கோலாலம்பூர்:
கடந்த 22 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த மலேசியப் பிரதமர் மகாதிர் முகம்மது இன்று பதவி விலகினார்.
அலுமினியம் மற்றும் ரப்பர் ஏற்றுமதியை மட்டுமே செய்து வந்த மலேஷியாவை உற்பத்தித் துறையில் பலம்வாய்ந்த நாடாக மாற்றி, நாட்டின் செல்வத்தைப் பெருக்கியவர் மகாதிர். அவர் சர்வாதிகார ஆட்சி நடத்தியதாகக்குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் மலேசியாவின் பொருளாதாரத்தை தலை நிமிரச் செய்தவர் என்ற பெருமைமிக்கவர்.
தெற்காசியாவிலேயே பணக்கார நாடாக மலேசியாவை மாற்றியவர். ஆசிய தலைவர்களில் மஹாதிர்தனித்தன்மையுடன் செயல்பட்டவர். 77 வயதான மகாதிர் தீவிரமாக அமெரிக்க எதிர்ப்பாளர்.
சமீபத்தில் இஸ்லாமிய மாநாட்டில் பேசிய அவர் அமெரிக்கா மூலமாக யூதர்கள் தான் இந்த உலகைஆளுகிறார்கள் என்று கூறிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
1925ம் ஆண்டு டிசம்பரில் பள்ளி ஆசிரிரியரின்ம் பத்தாவது மகனாகப் பிறந்தவர் மகாதிர். அரசியலுக்கு வரும்முன் மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார்.
மகாதிர் பதவி விலகியதையடுத்து தேசிய மாளிகையில் இன்று நடந்த விழாவில் அந் நாட்டின் ஐந்தாவதுபிரதமராக அப்துல்லா அகமத் பதவாய் (வயது 65) பதவியேற்றுக் கொண்டார்.
மகாதிர் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் மலேசிய மன்னர் சையது சிரஜுதின் புத்ரா ஜமாலுல்லாலில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.