மதுரை உயர் நீதிமன்ற எல்லை: பேச்சு முடிந்தது
சென்னை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்குரிய மாவட்டங்களை வரையறுப்பது தொடர்பான வழக்கறிஞர்களுடனான பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதாக தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியுள்ளார்.
இதற்கிடையே, மதுரையில் கிளையை அமைப்பதால் சென்னை வழக்கறிஞர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில், மத்திய சட்டத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றக் கிளை வரும் 24ம் தேதி திறக்கப்படவுள்ளது. மதுரை கிளைக்கு 14 மாவட்டங்களை ஒதுக்கிகுடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந் நிலையில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையில் 9பேர் கொண்ட நீதிபதிகள் குழு மாவட்ட எல்லை நிர்ணயம், மதுரைக்கு ஒதுக்கப்பட வேண்டிய வழக்குகளின் தன்மை ஆகியவை குறித்துவிவாதிக்க அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் ஏற்கனவே சென்னையில் நடந்தது. நேற்று இரண்டாவது முறையாக கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில்சென்னை, மதுரை மற்றும் தென் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திருவாரூர் மாவட்ட வழக்கறிஞர்கள், தாங்கள் சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள்ளேயே இருக்கவிரும்புவதாகத் தெரிவித்தனர். ஏற்கனவே நடந்த கூட்டத்தில் பெரம்பலூர், நாகப்பட்டனம் மாவட்ட வழக்கறிஞர்களும் இதேபோன்றகோரிக்கையை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மற்ற மாவட்ட வழக்கறிஞர்கள் மதுரை கிளையிலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். சென்னையைச்சேர்ந்த வழக்கறிஞர்களில் பெண் வழக்கறிஞர் வைகையைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மதுரைக்கு கூடுதல் வழக்குகள்,மாவட்டங்களை ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
வழக்கறிஞர்களின் விவாதங்களின் அடிப்படையில் விவாக ஆய்வு செய்து தனது முடிவை குழு அறிவிக்கும் என்று கூட்டத்திற்குப் பின்னர்வழக்கறிஞர்களிடம் நீதிபதி சுபாஷன் ரெட்டி தெரிவித்தார்.
சட்டத்துறை பதில் மனு:
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையை தொடங்குவது தொடர்பான குடியரசுத் தலைவரின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னைஉயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுப்ரமணியம் உள்ளிட்ட 3 வழக்கறிஞர்கள் ரிட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீது கடந்த 3 நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. இன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி பிரபா ஆகியோர்முன் மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, மத்தியசட்டத்துறை சார்பில் வழக்கறிஞர் கோபாலன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், மதுரை கிளையால் சென்னை வழக்கறிஞர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் மதுரை கிளையிலும் வாதிடலாம்.மக்கள் நலன் கருதியே மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை கிளைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடிசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.