தீயில் கருகிய பட்டாம் பூச்சிகள்
ஆசிரியர்
காலையில் பட்டாம் பூச்சிகளாய் அம்மா, அப்பாவுக்கு கை அசைத்து, டாடா காட்டிவிட்டுப் போனஇளம் பிஞ்சுகள் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கரிக் கட்டைகளாகி உருமாறிப் போயுள்ளனர்.
ஒரு பாவமும் அறியாத அப்பாவிக் குழந்தைகள் அநியாய நெருப்பின் ஆக்ரோஷத்துக்கு பலியாகிப்போய்விட்டனர்.
அவர்களின் கடைசி நிமிடங்களை, தீயுடன் அவர்கள் நடத்திய உயிர்ப் போராட்டத்தை நினைத்தால்உடல் நடுங்குகிறது.
தங்கள் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டது தெரியாமல், உடல் வெந்துபோய் மருத்துவமனை படுக்கைகளில் அரை மயக்கத்தில் முனகிக் கொண்டுக் கிடக்கும்குழந்தைகளைக் காணும் யாரும் கண்ணீரை அடக்கிவிட முடியாது.
இந்தத் துயரத்துக்கு யார் பொறுப்பு? நான்கு அதிகாரிகளை பணியில் இருந்து இடைநீக்கம்செய்துவிட்டதோடு விவகாரம் முடிவுக்கு வந்துவிடுமா?
கல்வி ஒரு காலத்தில் இறைப் பணியாய் கருதப்பட்டது. இன்று அது கள்ளச் சாராயம் அளவுக்கு தரம்தாழ்ந்து போய்விட்டது.
எங்கும், எதிலும் நீக்கமற பரவிவிட்ட ஊழல் கல்வியையும் விட்டு வைக்கவில்லை.
எம்.பி, எம்.எல்.ஏ ஆகிவிட்டால் பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சி எடுப்பதெல்லாம் அந்தக் காலம்.இப்போது பள்ளி, கல்லூரிகள் தொடங்குவது தான் லேட்டஸ்ட்.
பதவியில் இருக்கும்போது தான் ரோடு காண்ட்ராக்ட்டுகள், கட்டட காண்ட்ராக்ட்களை எடுத்துகமிஷன் அடிக்க முடியும். ஆனால், கல்வி என்பது பணம் கொழிக்கும் என்பது அட்சயபாத்திரமாகிவிட்டதால், இப்போதெல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கு படிப்பின் மீது ரொம்பவேஅக்கறை வந்துவிட்டது.
அரசியல்வாதிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல நம் அதிகாரிகள்.
இந்த இருவரும் கைகோர்த்துக் கொண்டு நடத்தி வரும் ஊழல் சாம்ராஜ்யம் தான் நம் ஜனநாயகம்என்றாகிவிட்டது.
இதன் எதிரொலிகளில் ஒன்று தான் மொட்டை மாடியில், ஓலைக் குடிசையில் பள்ளி.
கும்பகோணத்தில் உயிரைப் பறித்த அந்தப் பள்ளி அமைந்திருக்கும் சந்தில் (தெரு) ஆரம்பித்துஇரண்டாவது மாடியை அடையும் மாடிப் படிகள் வரை எல்லாமே, நம் அதிகாரவர்க்கத்தினரின்மனதை, விட மகா குறுகலானவை.
சுமார் 1,000 மாணவ, மாணவிகள் கூடும் இடத்துக்குத் தேவையான எந்த அடிப்படை வசதியும்அங்கில்லை.
அப்பட்டமான பல விதி மீறல்களையும் தாண்டி, அந்தப் பள்ளி அரசு நிதியுதவியோடு நடந்துவந்திருக்கிறது.
இதை சாத்தியப்படுத்தியது அரசியலும் அதிகார வர்க்கமும் தான்.
இது போல தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் இயங்கி வருகின்றன என்பது தான்அதிர்ச்சிகரமான உண்மை.
மீண்டும் ஒரு கும்பகோண சம்பவம் நடந்துவிடாமல் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கும் உண்டு,மக்களுக்கும் உண்டு.
தங்களது பகுதிகளில் இயங்கும் பாதுகாப்பில்லாத பள்ளிகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டிய கடமை மக்களைச் சார்ந்ததே.
குறைகளை நிவர்த்தி செய்ய அரசியல் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் தவறும்பட்சத்தில்போராட்டங்களில் குதித்தாவது, அரசின் கவனத்தை ஈர்த்து பள்ளிகளின் பாதுகாப்பை மக்கள் உறுதிசெய்ய வேணடும்.
மதக் கலவரம் நடத்தவும், ஜாதிச் சண்டை போடவும் அவகாசம் இருக்கும் நமக்கு இது போன்றகாரணங்களுக்காக போராட்டம் நடத்தவும் நேரமும், மனமும் இருந்தே ஆக வேண்டும்.
இனி இது போன்ற ஒரு சம்பவம் நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்தக் காலத்திலும் நடந்துவிடாமல்தடுத்தாக வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளோடும் நமக்கும் உண்டு.
உயிர் நீத்த அந்த மொட்டுக்களுக்கு தட்ஸ்தமிழ் வாசகர்கள் சார்பில் என் கண்ணீர் அஞ்சலி.
ஆசிரியர்