மன்மோகன் சிங் தாய்லாந்து பயணம்
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் பயணமாக இன்று தாய்லாந்து சென்றார். அவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர். பிரதமரான பின் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது.
தன்னை வழியனுப்ப இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு எந்த அமைச்சரும் அதிகாரிகளும் வர வேண்டாம் என சிங் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் மரபுப்படி வழியனுப்பி வைக்க வருவதாக அமைச்சர்கள் வருவதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, நீங்கள் 2 மணி நேரம் பயணம் செய்து, வழியெல்லாம் மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை உருவாக்கி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வரை வர வேண்டாம் என்று கூறிவிட்ட சிங், அவர்களை தனது வீட்டருகே உள்ள பழைய சப்தர்ஜங் விமான நிலையம் வரை மட்டும் வருமாறு கூறினார்.
இதையடுத்து சோனியா, அமைச்சர்கள் அந்த விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் இருந்து விடைபெற்ற சிங், ஹெலிகாப்டரில் இந்திரா காந்தி விமான நிலையத்துக்குக் கிளம்பினார். அங்கிருந்து சிறப்பு விமானத்தில் அவர் தாய்லாந்து கிளம்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மூன்று இந்தியர்களையும் மீட்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த முயற்சிகள் வெற்றி பெறும் என்றார்.
இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மார், இலங்கை, பூடான், நேபாள் ஆகியவை இணைந்து பொருளாதார ஒத்துழைப்புக்கான துணை பிராந்தியக் குழுவை (பிம்ஸ்டெக்) உருவாக்கியுள்ளன.
இந்தக் குழுவின் முதல் மாநாட்டில் பங்கேற்கவே சிங் தாய்லாந்து சென்றார். வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், வர்த்தகத்துறை அமைச்சர் கமல் நாத்துடன் செல்லும் சிங், குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பிரதமர்கள், தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.