சாகும்வரை உண்ணாவிரதம் வாபஸ்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தங்களது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக்கைவிட்டுள்ளனர்.
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை இடமாற்றம் செய்ய வேண்டும், மதுரை கிளைக்கு ரிட் அதிகாரம் வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைமேற்கொண்டிருந்தனர்.
இவர்களுக்குப் போட்டியாக, தலைமை நீதிபதிக்கு ஆதரவாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்களும்உண்ணாவிரதத்தில் குதித்தனர்.
இந் நிலையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் 23 பேர் கொண்ட குழு, நேற்று நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தைநடத்தியது. அப்போது சுபாஷன் ரெட்டிக்கு எதிரான நிலையையும், தீர்மானங்களையும் கைவிட்டால், சிலசலுகைகளை வழங்குவதாக நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதாவது, ஜூலை 23ம் தேதி வரை (மதுரை கிளை திறக்கப்படுவதற்கு முதல் நாள்) தாக்கலான அனைத்து ரிட்மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படும். சுபாஷன் ரெட்டி முன்னிலையில்விசாரிக்கப்பட்டு வரும் மதுரை கிளைக்கு எதிரான வழக்கும் வேறு பெஞ்சுக்கு மாற்றப்படும்.
மதுரை கிளைக்கான மாவட்டப் பகிர்வு தொடர்பாக ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் 9 நீதிபதிகள் குழுவின் அறிக்கையைவெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட பகிர்வு குறித்து தீர்மானமான முடிவு எடுக்கப்படும் வரை மதுரைகிளையில் வழக்குகள் பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்படும் என்பது போன்ற சலுகைகளை நீதிபதிகள்தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கூடிய வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில், போராட்டத்தை வாபஸ் பெறுவது என்றும்,திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்புவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சுபாஷன் ரெட்டியை புறக்கணிப்பது என்ற முடிவில் மாற்றம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.