கொச்சிக்கு போகிறது தூத்துக்குடி- கொழும்பு கப்பல் சர்வீஸ்
சென்னை:
தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், கேரளாவில் இருந்துஇலங்கைக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க இருக்கிறது.
கடந்த பாஜக ஆட்சியில், தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பலைத் தொடங்க முன்னாள் மத்தியஅமைச்சர் திருநாவுக்கரசர் ஆர்வம் காட்டி வந்தார். இரு நாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு,தூத்துக்குடி துறைமுகத்தில் டிக்கெட் கெளண்டர், ஓய்வறை, குடியுரிமை வசதி, நாணயங்கள் மாற்றும் வசதி மற்றும்சுங்கச் சோதனை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
திருநாவுக்கரசரைப் போலவே இப்போதைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவும்,தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கப்பல் விடுவதில் ஆர்வம் காட்டினார்.
ஆனால் தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கப்பல் விட்டால், விடுதலைப் புலிகள் ஊடுருவக்கூடும் என்று முதல்வர்ஜெயலலிதா இத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக பிரதமர்மன்மோகன் சிங்குக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
அதே நேரத்தில் கொச்சியில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு, அனுமதி கோரிடி.ஆர். பாலுவிடம் கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணி இருமுறை நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தை இதுதொடர்பாகவலியுறுத்தி வருகின்றனர். இதனால் கொச்சி-கொழும்பு கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசு விரைவில் அனுமதிஅளிக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து டி.ஆர். பாலுவிடம் கேட்டபோது,
தமிழக அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க மத்திய அரசு விரும்பவில்லை. கொச்சியில் இருந்து கப்பல்இயக்க அம் மாநில முதல்வரும், எம்.பிக்களும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசு இத் திட்டத்தைவிரும்பவில்லை.
அதேசமயம் கேரள அரசும், அதிகாரிகளும் இத் திட்டத்தை கேரளாவுக்குக் கொண்டு வர பெரும் ஆர்வம்காட்டுகிறார்கள். ஆர்வம் காட்டுபவர்களிடம்தான் மத்திய அரசு ஒத்துழைத்து செயல்பட முடியும். அவர்களதுவேண்டுகோளை மத்திய அரசு சாதகமாகப் பரிசீலிக்கும்.
பாகிஸ்தானுடன் கடுமையான சண்டை நடந்தபோதிலும் கூட பஸ், ரயில் போக்குவரத்தை நம்மால் நடத்த முடிந்தது.எனவே தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்துத் திட்டம் எந்த விதத்திலும் தமிழகத்திற்கோ,இந்தியாவுக்கோ ஆபத்தாக இருக்க முடியாது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவேஇதுபோன்ற போக்குவரத்துத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்துத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் தென் மாவட்டவியாபாரிகளுக்கு மிகப் பெரும் பலன் கிடைத்திருக்கும். சுற்றுலாவும் நன்கு வளர்ச்சியடையும் என்றார்டி.ஆர்.பாலு.
இதையெல்லாம்விட தமிழக- இலங்கை தமிழர்களுக்கு இடையிலான உறவு வலுப்படவும் இந்தப் போக்குவரத்துஉதவியாக இருந்திருக்கும். இப்போது இத் திட்டத்தை கேரளம் தனது மாநிலத்துக்கு இழுத்துச் செல்வதால்தமிழகத்துக்கு பல வகைகளில் இழப்பு தான்.