கோபால்: அரசின் மனு தள்ளுபடி- உடனே அப்பீல்
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு பொடா வழக்கு ஆவணங்களை வழங்க வேண்டும் என்று மறு ஆய்வுக் குழுவிதித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்துவிட்டது.
பொடா சட்டத்தின் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார் கோபால். அவர் மீதான பொடா வழக்குஆவணங்களை 14ம் தேதிக்குள் (இன்று) அவரிடம் தமிழக அரசு வழங்க வேண்டும் என மறு ஆய்வுக் குழு நீதிபதிசஹார்யா உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், அதில் உள்ள சில ஆவணங்கள் மிக ரகசியமானவை என்றும், அதை கோபாலிடம் தர முடியாது என்றும்தமிழக அரசு கூறி வந்தது. அரசின் இந்த வாதத்தை பொடா மறு ஆய்வுக் குழு ஏற்கவில்லை.
இதையடுத்து, பொடா மறு ஆய்வுக் குழுவின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசின் சார்பில் உள்துறைச் செயலாளர் ஷீலாராணி சுங்கத் வழக்குத் தொடர்ந்தார். அதில்,
கோபால் வழக்கில் இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் அவரிடம்வழக்குத் தொடர்பான விசாரணை ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் இன்று வழங்கிய தீர்ப்பில்,
பொடா மறு ஆய்வுக் குழுவின் உத்தரவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம்ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்டது. இதனால் தமிழக அரசின் மனு மீது உயர் நீதிமன்றத்தால் எந்த உத்தரவும்பிறப்பிக்க முடியாது. இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று அறிவித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலேயே தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த அப்பீல் மனுமீதும் இன்றே விசாரணை நடக்கிறது.