ஐசிசி கிரிக்கெட்: பாகிஸ்தான் படுதோல்வி
சவுதாம்ப்டன்:
மினி உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானை 7விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை சந்தித்தது. டாஸ் வென்ற இன்சமாம்பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கத்திலே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிராட்ஷாவின் பந்துவீச்சில்பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் டக் அவுட்டானார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த யாசிர் ஹமீது 39 ரன்களில் ரன் அவுட்டானார். பின்னர் பிரேவோ பந்து வீச்சில்சோயப் மாலிக் 17 ரன்களுக்கு அவுட்டானார். இதனையடுத்து விக்கெட்கள் மளமளவென சரிந்தன. யோகனா 12ரன்கள், ரசாக் 6 ரன்கள், இன்சமாம் 21 ரன்கள், மொயின்கான் 0, அப்ரிடி 17 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
நவீத், சமி ஆகியோரும் டக் அவுட்டாக இறுதியில் பாகிஸ்தான் 38.2 ஓவரில் 131 ரன்களுக்கு சுருண்டது. கடைசி 6விக்கெட்டுகள் 31 ரன்களில் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து பேட் செய்ய வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி அக்தரின் வேகப்பந்தில் கெய்ல்(1 ரன்), ஹிண்ட்ஸ்(5ரன்) விக்கெட்களை இழந்தது. பின்னர் வந்த கேப்டன் லாரா, சர்வான் ஜோடி ரன்களை விரைவாக சேர்த்தது. லாரா,ரசாக்கின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார்.
சிறப்பான முறையில் விளையாடிக் கொண்டிருந்த லாரா, "ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
15வது ஓவரில் அக்தர் வீசிய பந்து நேராக லாராவின் வலது காதுக்கு கீழே, கழுத்துப் பகுதியை பலமாக தாக்கியது.இதனால் லாரா அப்படியே கீழே விழுந்தார். இந்த காயத்தால் வெளியேறினார் லாரா. இவர் 30 பந்துகளில் 5பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த சந்தர்பால் 11 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் ரிக்கார்டோ பவல், சர்வான் ஜோடி அணியைவெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 28.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து மேற்குஇந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. 56 ரன்கள் எடுத்த சர்வான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப் பட்டார்.
நாளை மறுநாள் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் மோதுகின்றன.