கிருஷ்ணா நீர்: ஜெ. இன்று ஹைதராபாத் பயணம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று ஹைதராபாத் பயணம் செய்கிறார். அவருடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் செல்கிறது.
சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தை தீர்ப்பதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை வலியுறுத்தி ஜெயலலிதா இரண்டு முறை கடிதம் எழுதினார்.
கடந்த 15ம் தேதியன்று தமிழக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் குழு கண்டலேறுஅணைக்குச் சென்று அணையின் நிலையைப் பார்வையிட்டு அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது.
இந் நிலையில் நெல்லூரில் நடந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்ட விழாவில் கலந்து கொண்ட மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர்டி.ஆர்.பாலு, கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குமாறு கோரி ஆந்திர முதல்வரை கேட்டுக் கொள்ளுமாறு கூறி தன்னைதிமுக தலைவர் கருணாநிதி அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதற்கு, அக்டோபர் 15ம் தேதிக்குள் கிருஷ்ணா நீர் சென்னைக்கு வந்து சேரும் என்று டி.ஆர்.பாலுவுக்கு முதல்வர் ராஜசேகர ரெட்டிபதிலளித்தார்.
இந் நிலையில் ஜெயலலிதா இன்று ஹைதராபாத் செல்கிறார். இன்று மாலை தனி விமானம் மூலம் ஹைதராபாத் செல்லும் ஜெயலலிதாவுடன்,தலைமைச் செயலாளர் பொறுப்பை வகிக்கும் நிதித்துறை செயலாளர் நாராயணன், பொதுப்பணித்துறை செயலாளர் பழனியப்பன்ஆகியோரும் செல்கிறார்கள்.
நாளை ராஜசேகர ரெட்டியை சந்தித்துப் பேசும் ஜெயலலிதா, கிருஷ்ணா நதி நீரை விடுவிப்பது குறித்து பேச்சு நடத்துவார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதிகாரிகள் சென்னைக்குத் திரும்புகிறார்கள். ஜெயலலிதா மட்டும் ஒரு வாரம் ஹைதராபாத்தில் உள்ள தனதுதிராட்சை தோட்டத்தில் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார்.