ஜெவுக்கு விருது: திமுகவுக்கு சிரிப்பு வருது
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது தரப்படவுள்ளது குறித்து திமுக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி. சற்குண பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெண்கள் முன்னேற்றத்துக்காக ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது வழங்கப்பட இருப்பதாக செய்தி வந்ததைக் கேட்டு சிரிப்பைஅடக்க முடியவில்லை.
இந்தியா டுடே பத்திரிக்கை மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் நாட்டிலேயே மோசமான முதல்வராக தொடர்ந்து 3 முறை தேர்வுசெய்யப்பட்டவர் ஜெயலலிதா. இவருக்கு தங்கத் தாரகை விருதாம்.
பாலினப் பாகுபாட்டை இந்தச் சமூகத்தில் இருந்து அறவே அகற்றிட அம்மையார் பாடுபட்டாராம், இதற்காக இந்த விருதாம்.பத்திரிக்கைளைப் புரட்டினால் வேலியை பயிரை மேய்ந்த கதையாக ஜெயலட்சுமியைக் கெடுத்த காவல்துறையினர் பட்டியல் வந்தகொண்டே இருக்கிறது.
போலீஸ்துறையின் பொறுப்பை வைத்திருக்கும் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை. இந்த நிலையில்பாலினப் பாகுபாட்டை அகற்றியதற்காக விருது தருகிறார்களாம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்தார் என்ற தவறான செய்தியையும் சொல்லி விருது தருவதாக சொல்கிறார்கள். தமிழ்நாடு மகளிர்மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரால் 1991ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் தான் பின்னர் மகளிர் சுய உதவிக் குழுஎன பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த உண்மையை மறைத்துவிட்டு திரைப்படத் தாரகைக்கு தங்கத் தாரகை விருது தரப்படுகிறது.
நாட்டிலேயே மோசமான முதல்வர் என்ற அந்தஸ்தைப் பெற்ற ஜெயலலிதா எந்த முகத்தோடு போய் இந்த விருதை வாங்கப் போகிறார்.ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை குழி தோண்டி புதைத்த ஜெயலலிதா, பெண்கள் நலனுக்காகப் பாடுபட்டதற்காக விருது பெறப்போகிறார்.
ஜெயலலிதாவின் இந்த கூத்தைக் கண்டு தமிழகப் பெண்கள் வாய் விட்டு சிரிக்கப் போகிறார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications