நடிகர் சங்கத்திற்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் இதன் நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேட்டீஸ்அனுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2000மாவது ஆண்டு நடந்ததேர்தலின்போது தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் 2003ம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே முடிந்து விட்டது.
ஆனால், அதற்குப் பிறகும் தேர்தல் நடத்தாமலேயே சங்க நிர்வாகிகள் தங்களது பொறுப்புகளில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர். இதுவிதிகளுக்கு எதிரானது என்று கூறி தேர்தலை நடத்துமாறு நான் கோரினேன். இதனால் என்னை சங்கத்திலிருந்தே நீக்கி விட்டனர்.
என்னை நீக்கியது செல்லாது, சங்கத்திற்கு உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி குலசேகரன், இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி சங்க நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-திரைப்பட விருது விழா ஒத்திவைப்பு
இதற்கிடையே, தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000, 2001, 2002ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா வரும் 1ம்தேதி நடைபெறுவதாக இருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் தற்போது விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு ஆளுநர் ராம் மோகன் ராவ்தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் திடீரென ராஜினாமா செய்து விட்டதால் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.