கண் பறிபோன சிறுவனுக்கு கலாம் உதவி
அகமதாபாத்:
காட்டுமிராண்டி ஒருவனின் தாக்குதலில் இரு கண்களில் பார்வையை இழந்த 4 வயது சிறுவனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச்செய்யத் தேவையான அறுவை சிகிச்சைக்கான முழு மருத்துவச் செலவையும் ஏற்க குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்வந்துள்ளார்.
குஜராத்தின் பாவ்நகரைச் சேர்ந்த மகேஷ் கும்பானியா என்ற அச் சிறுவன் ஒரு மாதத்துக்கு முன் ஒரு நபரால் தாக்கப்பட்டான்.தாக்கிய அந்த நபர் ஓடிவிட்டான்.
இத் தாக்குதலில் மகேஷின் இரு கண்களின் கண் திரைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் அவன் பார்வையிழந்தான்.
அவனுக்கு மும்பையைச் சேர்ந்த டாக்டர் நடராஜன் சிகிச்சை அளித்து வருகிறார். இரு கண்களிலும் தானம் செய்யப்பட்டகண்களில் இருந்து கார்னியாக்களை எடுத்து பொறுத்த வேண்டியுள்ளது.
ஆனால், இந்தச் செலவை ஏற்கும் நிலையில் மகேசின் குடும்பம் இல்லை. இந்தச் செய்தியை பத்திரிக்கைகளில் படித்த கலாம், அச்சிறுவனின் மருத்துவச் செயலவை ஜனாதிபதி மாளிகையே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.
கலாமின் செயலாளர் பி.என். நாயர் நேற்றிரவு, பாவ்நகர் மாவட்ட காவல்துறை எஸ்.பியைத் தொடர்பு கொண்டு, அச் சிறுவன்குறித்த அனைத்து விவரங்களையும் உடனடியாக சேகரித்து ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அச் சிறுவனின் அனைத்து மருத்து செலவுகளையும் ஜனாதிபதி மாளிகை ஏற்கப் போவதாகவும், அவனுக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்யும் வகையில் உடனே அவனை அகமதாபாத்துக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறும் நாயர் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக நிருபர்களிடம் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.