கலாமுக்கு நக்சலைட்டுகள் கொலை மிரட்டல் !
பாண்டிச்சேரி:
ஜனாதிபதி அப்துல் கலாம் பாண்டிச்சேரி வந்திருந்தபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரி விடுதலையானதின் பொன்விழாவையொட்டி அம் மாநில சட்டசபை சிறப்புக்கூட்டத்தில் கலாம் நேற்று உரையாற்றினார். அத்தோடு வேறு சில நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.
கலாம் வருகையையொட்டி புதுவை முழுவதும் வழக்கத்தைவிட மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இது குறித்துகாவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது,
பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:
நேற்று காலை மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் காலை யாரோ சிலர், ஆடியோ கேசட் ஒன்றை வீசி விட்டு ஓடினர்.
அந்தக் கேசட்டில் சுற்றப்பட்டிருந்த தாளில், இன்று உங்களது பாதுகாப்பில் இருக்கும் முக்கிய நபர் (ஜனாதிபதி கலாம்)கொல்லப்படுவார் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த கேசட்டில் தமிழ்ப் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அனைத்துப்பாடல்களும் நக்சலைட் அமைப்புகளைச் சேர்ந்த பாடல்கள் போல இருந்தன.
இதையடுத்து கலாமுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சட்டசபைக்கு வரும் சில முக்கியச் சாலைகள் மூடப்பட்டுபலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கொலை மிரட்டல் குறித்து ஓர்லியன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல்விடுத்தவர்கள யார் என்பதை போலீஸார் விசாரித்து வருகிறார்கள் என்றார்.
வீண் பரபரப்பு கிளம்பிவிடும் என்பதால் தான் கலாம் வந்தபோது இந்தத் தகவலை காவல்துறை வெளியிடவில்லை என்றார்.
நக்ஸல்கள் தான் கொலை மிரட்டல் விடுத்தார்களா அல்லது அவர்களது பெயரில் வேறு யாராவது மிரட்டல் விடுத்தார்களா என்றகோணத்தில் விசாரணை நடக்கிறது.