பெட்ரோல் விலை- கருணாநிதியின் துரோகம்: ஜெ. தாக்கு
சென்னை:
பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக வாக்களித்த வாக்காளருக்குத் துரோகம் இழைக்கும் விதமாக திமுக தலைவர் கருணாநிதிசெயல்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: ஆளுநரை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அதை உடனடியாக நிறைவேற்றத்துடிக்கிறார் கருணாநிதி. அதை நிறைவேற்றியும் விடுகிறார். அதற்கெல்லாம் அவருக்கு திறன் உள்ளது, நேரம் இருக்கிறது. ஆனால்,மக்கள் பிரச்சினைகள் என்றால் மெளனமாகி விடுகிறார் கருணாநிதி.
மக்களுக்குப் பிரச்சினை என்றால் குரல் கொடுக்காமல் இருப்பதை அவர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். தனக்கு வாக்களித்தமக்களுக்கு துரோகம் இழைக்கும் விதமாக கருணாநிதி தலைமையிலான திமுக செயல்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான முக்கிய முடிவை எடுக்கும் அதிகாரம் படைத்த மத்திய பொருளாதாரவிவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் இடம் பெற்றுள்ளார்.
அமைச்சரவை அளவிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுக்க திமுக முயன்றிருக்கலாம். திறன் இருந்தும் அதைத்தடுக்காமல் விட்டு விட்டு இப்போது பெட்ரோல், டீசல் உயர்வை உடனடியாக வாபஸ் பெறுமாறு கருணாநிதி அறிக்கை விடுவதுமோசடித்தனமானது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக மக்களை முட்டாளாக்க நினைக்கிறது. இந்த கேலிக் கூத்தை மக்கள் நம்பி ஏமாறமாட்டார்கள். ஒரே நேரத்தில் பூனைக்குத் தோழனாகவும், பாலுக்குக் காவலாகவும் இருக்க பார்க்கிறது திமுக. இந்த செயலைமக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு மூச்சு முட்டிய உடன் விழித்துப் பார்க்கும் அரசு என்று என்னுடைய அரசைப் பற்றி கருணாநிதிகூறியுள்ளார். மக்களுக்கு எந்த துன்பமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று சிந்தித்து செயல்படுகிற எனது அரசு எங்கே? ஆட்சிப்பொறுப்பிற்குள் வந்த 5 மாத காலத்திற்குள் மக்கள் விரோத அரசாக மாறியுள்ள மத்திய அரசு எங்கே?
மத்திய அரசுடன் எனது அரசை ஒப்பிட்டுப் பேசுவதே தவறாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.