லட்சுமி பிரானேஷ் மீதான வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்
சென்னை:
தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மீது திமுக தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்று விளக்கம்அளிக்குமாறு தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே நடந்த தொலைபேசிஉரையாடலை வெளியிட்டது, ஆளுநர் மாற்றம் தொடர்பாக திமுக மீது குற்றம் சாட்டியது ஆகியவற்றின் மூலம் இந்திய ஆட்சிப்பணியாளர்கள் சட்டத்தை லட்சுமி பிரானேஷ் மீறி விட்டதாக திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் போல செயல்பட ஆரம்பித்துள்ள லட்சுமி பிரானேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட அதில் வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இம் மனுவை விசாரணை செய்ய முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசு மற்றும் மத்தியஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.