ஜாமீன் கோருகிறார் மதானி: மீண்டும் மனு
சென்னை:
செயற்கைக்கால் பொருத்துவதற்கான சிகிச்சைக்காக தன்னை ஜாமீனில் வெளியே செல்ல அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கேரள முஸ்லீம் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி மனு செய்துள்ளார்.
கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மதானி கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து விட்டது. மேலும், தமிழக அரசும் மதானி ஜாமீனில் விடுதலை ஆவதை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந் நிலையில் மதானியை ஜாமீனில் விடுதலை செய்ய கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.கேரளாவைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இந்த முயற்சிகளை மும்முரமாக செய்து வருகிறது.
கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவரும், அம் மாநில தொழில்துறை அமைச்சருமான குஞ்ஞாலிக் குட்டி,அம் மாநில தல்வர் உம்மன் சாண்டியுடன் சமீபத்தில் சென்னை வந்து மதானிக்கு ஜாமீன் கிடைக்க உதவுமாறு கோரினார்.
ஆனால், இக் கோரிக்கைகளை ஜெயலலிதா நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் தான், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதானியின் சார்பில் இன்று புதிய மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இதில் செயற்கைக் கால் பொருத்துவதற்காக தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று மதானிகோரியுள்ளார்.
இந்த மனு நாளை நீதிபதி கனகராஜ் முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது.
வீரப்ப விவகாரத்தில் மதானி?:
தனகுக்கு உதவியாக இருக்க 4 முஸ்லீம் இளைஞர்கள் தேவை என தனக்கு நெருக்கமானவர்களிடம் வீரப்பன் கேட்டதாகவும்,இதைத் தெரிந்த கொண்ட அதிரடிப்படை, மதானி மூலமாக சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 4 இளைஞர்களைகாட்டுக்குள் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
உள்துறைச் செயலாளராக இருந்த முனீர் ஹோதா (மதானிக்கு உதவியாக இருந்தற்காக பின்னர் இவர் நீக்கப்பட்டார்) தான் இதுதொடர்பாக மதானியிடம் பேசி ஒப்புக் கொள்ள வைத்ததாகவும், இளைஞர்களை அனுப்பி உதவினால், உங்களுக்கு ஜாமீன்கிடைக்க வழி செய்யப்படும் என்று சொல்லியே மதானியை முனீர் ஹோதா வளைத்ததாகவும் சில செய்திகள் வருகின்றன.
ஆனால், அதிரடிப்படையினர் நினைத்த அளவுக்கு அந்த 4 இளைஞர்களால் வீரப்பனுடன் நெருக்கமாக முடியவில்லை.அவர்களை வீரப்பன் திருப்பி அனுப்பிவிட்டான். இதனால் அவர்களை வைத்து வீரப்ப வதம் சாத்தியமில்லாமல் போய்விடவே,அந்த ஆபரேசன் அப்படியே கைவிடப்பட்டு, வேறு மார்க்கத்தில் வீரப்பன் முடிக்கப்பட்டான்.
இதனால், தன்னை தமிழக அரசு நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக தன்னைச் சந்திக்க வரும் கேரள பிரமுகர்களிடம் மதானி புலம்பிவருவது குறிப்பிடத்தக்கது.