பாஜகவிலிருந்து உமா பாரதி அதிரடி நீக்கம்
டெல்லி:
இன்று நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அத்வானிக்கும் உமா பாரதிக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்து உமா பாரதி பாதியில் வெளிநடப்பு செய்தார்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.கவில் இருந்து உமா பாரதி நீக்கப்பட்டார்.
தலைவராக அத்வானி பொறுப்பேற்ற பின் கட்சியின் நிர்வாகிகளை மாற்றியமைத்தார். உமா பாரதிக்கு பொதுச்செயலாளர் பதவிவழங்கினார். ஆனால், தனக்கு மத்தியப் பிரதேச முதல்வர் பொறுப்பை மீண்டும் தர வேண்டும் என உமா வலியுறுத்த அதை மற்றஇரண்டாம் மட்டத் தலைவர்கள் ஏற்கவில்லை.
கோஷ்டி மோதல்:
இதையடுத்து உமாவை சமாதானம் செய்யும் வகையில் மத்தியப் பிரதேச அரசைக் கட்டுப்படுத்தும் ஒரு குழுவை ஏற்படுத்தவும்,அதில் உமா பாரதிக்கு இடம் தரவும் முன் வந்தார் அத்வானி. இதை ஏற்றுக் கொண்ட உமா பாரதி, கட்சியின் பொதுச் செயலாளர்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
பதவியேற்ற கையோடு நிருபர்களிடம் பேசிய உமா, மத்தியப் பிரதேசத்தில் கட்சியின் வெற்றிக்கு நான் தான் காரணம் என்றார்.மேலும் பிரமோத் மகாஜனை அரசியல் தரகர் என்று வர்ணித்தார். இதையடுத்து அருண்ஜேட்லி, மகாஜன், முக்தார் அப்பாஸ்,வெங்கையா நாயுடு மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் உமாவுக்கு எதிராக களத்தில் குதித்து பத்திரிக்கைகளில் ஒருவருக்குஎதிராக ஒருவர் காரசாரமான பேட்டியளித்தனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியைப் போல, பா.ஜ.கவின் உட்கட்சிப் பூசலும் தெருவுக்கு வந்தது. ஆனால், கட்சிக்குள் எந்தக்குழப்பமும் இல்லை என பா.ஜ.க. தலைவர்கள் மறுத்தே வந்தனர்.
வாஜ்பாய் முன்னிலையில் வாக்குவாதம்:
இதையடுத்து இன்று புதிய நிர்வாகிகள் கூட்டத்தை அத்வானி கூட்டினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் அதில் கலந்துகொண்டார்.
கூட்டம் தொடங்கியதும் அத்வானி வரவேற்புரையை பேசி முடித்தார். உடனே எழுந்த உமா, இந்த அறையில் உள்ள 4,5 பேர்எனக்கு எதிராக பேட்டியளித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அது குறித்து இங்கு விவாதிக்கவேண்டும் என்றார்.
ஆனால், அந்த விஷயம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி அது குறித்து பேச வேண்டியதில்லை என்றார் அத்வானி.
இல்லை. இந்த விஷயம் குறித்து பேசியே ஆக வேண்டும் என்ற உமா பாரதி, எனக்கு எதிராக பேசும் இவர்கள் எல்லாம் மக்கள்ஆதரவு இல்லாத தலைவர்கள். எல்லோரும் ராஜ்யசபா மூலம் எம்.பி. பதவியை பிடித்துக் கொண்டு வேலை வெட்டி இல்லாமல்சுற்றுபவர்கள் என்றார்.
வெளிநடப்பு செய்த உமா:
அப்போது அருண்ஜேட்லி, பிரமோத் மகாஜன், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தங்களது நாற்காலிகளில் நெளிந்தனர்.
இதையடுத்து உமாவுக்கும் அத்வானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் இறுதியில் கூட்டத்தில் இருந்து உமா பாரதிபாதியிலேயே வெளியேறினார்.
பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் உமா செய்த கலாட்டாவால் அதிர்ந்து போன பா.ஜ.க. தலைவர்கள் அப்படியே அமைதியில்உறைந்தனர்.
விரட்டப்பட்ட பத்திரிக்கையாளர்கள்:
மைக்குகளையும், கேமராக்களையும் எடுத்துக் கொண்டு உடனே கூட்டம் நடக்கும் ஹாலை விட்டு வெளியேறுமாறுபத்திரிக்கையாளர்களுக்கு உத்தரவிட்டார் பா.ஜ.கவின் மீடியா செல் ஒருங்கிணைப்பாளரான சித்தார்த் நாத் சிங்.
உமா பாரதிக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை முழு ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் பா.ஜ.கவில்உயர் பதவியைப் பிடித்த மிகச் சில பிற்படுத்தப்பட்ட தலைவர்களில் உமாவும் ஒருவர்.
கட்சியை விட்டு நீக்கம்:
இதனால், உமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிற தலைவர்கள் வறுபுறுத்தி வந்தபோதும் கட்சித் தலைமை அமைதிகாத்து வந்தது. இந் நிலையில் அத்வானியுடனே உமா பாரதி மோதியதையடுத்து கட்சியைவிட்டு நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உமா பாரதி நீக்கப்படுவதாக ஜஸ்வந்த் சிங் மூலமாக அத்வானி அறிவிப்புவெளியிட்டார்.
குருமூர்த்தியுடன் உமா ஆலோசனை:
கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்களான குருமூர்த்தி, மதன்தாஸ்தேவி ஆகியோருடன் ஆலோசனைகளில் ஈடுபட்டார் உமா.
உமாவின் நீக்கத்துக்கு வி.எச்.பியிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிகிறது. பிரவீன் தொகாடியா உள்ளிட்டவி.எச்.பி. தலைவர்களின் ஆதரவுடன் உமா தனிக் கட்சி தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆட்சியில் இருந்தபோது ராமர் கோவில் குறித்து அத்வானி வாயே திறக்காததால், அவர் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தை வி.எச்.பி. தலைவர்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
நீக்கம் தாற்காலிகம் தான்.. பா.ஜ.க
வழக்கமாக பா.ஜ.க விதிகளின்படி கட்சியை விட்டு நீக்கப்படுபவர் 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்படுவார்.
ஆனால், உமா பாரதிக்கு வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ். மத்தியில் உள்ள செல்வாக்குக் காரணமாக, அவர் மீது இந்த கடுமையானநடவடிக்கையை பா.ஜ.க. எடுக்கவில்லை. இந்த நீக்கம் 6 ஆண்டுகளுக்கு அல்ல என்றும், உமா விஷயத்தில் கட்சி அடுத்தமுடிவை எடுக்கும் வரை தான் இந்த நீக்கம் அமலில் இருக்கும் என்றும் பின்னர் நிருபர்களிடம் அருண்ஜேட்லி கூறினார்.
நீக்கத்துக்கு வாஜ்பாய் ஆதரவு:
கட்சியில் ஒழுக்கத்தைக் கட்டிக்காக்கும் வகையில் உமா பாரதி நீக்கப்பட்டது சரிதான் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளார்.
உமா பாரதியின் கடும் எதிர்ப்புக்குள்ளான பிரமோத் மகாஜன், வாஜ்பாயின் கோஷ்டியைச் சேர்ந்தவர். மகாஜனுக்கு எதிராகஅத்வானி தான் உமா மூலமாக காய் நகர்த்துவதாக வாஜ்பாய் கோஷ்டி கருதி வந்தது. இந் நிலையில் தன்னை வளர்த்துவிட்டஅத்வானியுடனேயே மோதி, கட்சியை விட்டு நீக்கப்படும் அளவுக்குச் சென்றுவிட்டார் உமா.