சென்னையில் காலரா பரவுகிறது
சென்னை:
சென்னை நகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மிக வேகமாக காலரா நோய் பரவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர்காலராவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
நகரில் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது, இதனால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக வீராணம்திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீரும் மிகக் கலங்கலாகவும், அசுத்தமாகவும் வந்து கொண்டுள்ளது.
இதன் காரணமாக திருவல்லிக்கேணி, பட்டாளம், செங்குன்றம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பாடி, ராயபுரம் உள்ளிட்ட பலபகுதிகளில் காலாரா பரவி வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தண்டையார்பேட்டையில் உள்ள அரசு தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைக்கு வரும் பொது மக்களின் எண்ணிக்கை கடந்த சிலதினங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதுவரை 100க்கும் மேற்பட்டோர் காலாரா பாதிப்புக்கு ஆளாகி இங்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மட்டும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் 50 பேர் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நோயாளிகள் வந்தவண்ணம்உள்ளனர்.
இதனால் அப் பகுதிகளுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பி நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டியது அவசியம்.
காலாராவில் இருந்து தப்ப அசுத்தமான தண்ணீர் குடிப்பதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். தண்ணீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டிகுடித்தால் இந்த நோய்த் தாக்குதலில் இருந்து தப்பலாம்.