மும்பை: அமெரிக்கத் தூதரகம் திடீர் மூடல்
மும்பை:
மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று திடீரென மூடப்பட்டது. தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்என்று உளவுப் பிரிவினர் எச்சரித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிக்கு வந்த ஊழியர்கள் அனைவரும் பாதியிலேயே திடீரென வீடுகளுக்குத் திரும்புமாறு அனுப்பப்பட்டுவிட்டனர்.இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பாக டெல்லி, மும்பையில் அமெரிக்கர்கள் மீது மிக விரைவில் தாக்குதல் நடக்கலாம் என்று அமெரிக்க அரசு தங்களுக்குஎச்சரிக்கை அனுப்பியுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் அதிகம் கூடும் இடங்கள், கடைகள், ஹோட்டல்கள், வழிபாட்டு மையங்கள் கூட தாக்குதலுக்கு உள்ளாகலாம்என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லி, மும்பை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அமெரிக்கத் தூதரகததைச் சுற்றி கமாண்டோ போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத்தூதரகம் வழக்கம்போல் இயங்குகிறது.