சிக்கலில் கே.ஏ.எஸ். சேகர்- முன் ஜாமீன் கோருகிறார்
மதுரை:
மதுரையைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி கே.ஏ.எஸ்.சேகர் ரூ. 90 கோடி அளவிற்கு வரி மோசடி செய்துள்ளதாக தமிழக அரசுகுற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் கைதாகாமல் தப்ப அவர் முன் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.
இதையடுத்து அவர் மீதான வரி ஏய்ப்பு வழக்கு விவரத்தை முழுமையாக தாக்கல் செய்யுமாறு அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் மதுரையில் உள்ள சேகரின் அலுவலகங்கள், வீடுகளில் தமிழக விஜிலென்ஸ் பிரிவு போலீசார் சோதனைநடத்தினர். அப்போது ரூ.90 கோடி அளவிற்கு வரி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீஸார் தன்னைக் கைது செய்யலாம் என்ற அச்சத்தில் சேகர் முன் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்தார். மனு நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கையில் 90 கோடி வரி ஏய்ப்பு என்று குறிப்பிடப்படவில்லை. ரூ.38கோடி மட்டுமே பாக்கியிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இருப்பினும் மனுதாரருக்கு கொஞ்சம் வரி பாக்கி இருப்பது உண்மைதான்என்று கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விரிவான வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்குநீதிபதி உத்தரவிட்டார். அதோடு முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.