ஜெவுக்கு கடிதம் தவறில்லை:மன்மோகன்
டெல்லி:
ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியதில் எந்தத் தவறும் இல்லை. கடிதத்தில் நான்கூறிய கருத்துக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உடன்பாடு தெரிவித்திருந்தார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
காஞ்சி சங்கராச்சாரியாரின் வழக்கை மிக கவனமாக கையாளும்படியும், அவரது உடல் நலம் குறித்துப் பார்த்துக்கொள்ளும்படியும் கோரி ஜெயலலிதாவுக்கு, மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஜெயலலிதாவும் உடனடியாகபதில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து டெல்லியில் நடந்த அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சிங் கூறுகையில், ஜெயேந்திரருக்குமிகப் பெரும் பக்தர் எண்ணிக்கை உள்ளது. அதிக அளவிலான மக்கள் அவர் மீது மரியாதை வைத்துள்ளனர்.
அவர்களின் உணர்வுகளை மதித்தே முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதினேன். இதன் மூலம் சட்டத்தின் நடவடிக்கைகளில்நான் குறுக்கிடுவதாக அர்த்தப்படுத்த முடியாது. சட்ட நடவடிக்கையில் எனது கடிதம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கடிதத்தில் நான் கூறியிருந்த கருத்துக்களை ஜெயலலிதாவும் ஆமோதித்து தனது பதிலில் தெரிவித்திருந்தார். ஜெயேந்திரர் உடல்நலம் குறித்து மிகுந்த அக்கறை காட்டப்படுவதாக எனக்கு அனுப்பியிருந்த பதிலில் தெரிவித்திருந்தார் என்றார் சிங்.