சாமியார்களை திரட்டுவேன்: சு. சுவாமி மிரட்டல்!
மதுரை:
ஜெயேந்திரரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் இந்தியா முழுவதும் உள்ள சாமியார்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம்நடத்தப் போவதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயேந்திரர் போன்ற மிகப் பெரிய மதத் தலைவரை சிறையில்அடைத்திருக்கக் கூடாது.
அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பது இப்போது பிரச்சினை இல்லை. அவரை இப்படிக் கைது செய்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்என்பதுதான் எனது ஆதங்கம்.
அவர் தப்பி ஓடக் கூடியவர் அல்ல, ஏதாவது ஒரு வீட்டிலோ அல்லது மடத்திலேயே வைத்தோ விசாரித்திருக்கலாம். இதுதொடர்பாக உச்சநீதிமன்றமே முன்பு ஒரு முறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒருவர் தப்பி ஓடக் கூடியவர் என்றோ, சாட்சிகளைக் கலைக்க கூடியவர் என்றோ சந்தேகப்பட்டால் மட்டுமே அவரை சிறையில்அடைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.
ஆனால் சங்கராச்சாரியாரான ஜெயேந்திரரை உள்நோக்கத்துடன் ஜெயலலிதா அரசு கைது செய்துள்ளது. சோனியா காந்தியின் நிர்பந்தம்காரணமாகவே ஜெயலலிதா இவ்வாறு செயல்பட்டுள்ளதாக கருதுகிறேன்.
டிசம்பர் 1ம் தேதிக்குள் ஜெயேந்திரரை விடுதலை செய்ய வேண்டும். அவரை மடத்திலோ அல்லது ஏதாவது ஒரு வீட்டிலோ வைத்துவிசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா முழுவதும் உள்ள சாமியார்களைத் திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்சுவாமி.