ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
பாலாசூர்:
தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஆகாஷ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக மீண்டும்சோதனையிட்டது. கடந்த 4 நாட்களில் நடத்தப்பட்டுள்ள 2வது சோதனையாகும் இது.
ஹீட்-சென்சிங் திறன் கொண்ட இந்த ஏவுகணை விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் 27 கி.மீ. தூரம் வரை விரட்டிச் சென்று தாக்கும்திறன் கொண்டது.
முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை இன்று நடமாடும் லான்ஞ்சரில் இருந்து ஏவப்பட்டது.
ஒரிஸ்ஸா மாநிலம் சந்திபூரில் உள்ள ஏவுகணை ஆய்வு மையத்தில் இருந்து காலை 11.57 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது.
முன்னதாக இந்தியாவே தயாரித்துள்ள விமானியில்லாமல் இயங்கும் விமானமான லக்ஷயா விண்ணில் பறக்க விடப்பட்டது. 4.5 கி.மீ.உயரத்தில் பறந்த இந்த விமானத்தை ஆகாஷ் ஏவுகணை சரியாகத் தாக்கி சிதறடித்தது.
700 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணை 60 கிலோ எடையுள்ள குண்டை ஏந்திச் செல்லும் திறன் மிக்கது.
இன்று நடத்தப்பட்ட சோதனை 100 சதவீத வெற்றியடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.