ஆந்திராவில் சித்தூர் அருகே அப்பு கைது
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கூலிப்படைத் தலைவன் அப்பு ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கைதுசெய்யப்பட்டான்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதையடுத்து, அப்பு தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தான்.அவனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந் நிலையில் 7 பேர் கொண்ட தனிப் படை போலீஸார் தமிழக அரசின் தனி விமானம் மூலம் இன்று ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பு குறித்த மிக முக்கிய தகவல் கிடைத்துள்ளதாலேயே தனிப்படையினர் தனி விமானம் மூலம்விரைந்துள்ளதாக கூறப்பட்டது.
இப்போது அப்பு கைது செய்யப்பட்டிருப்பது போலீஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புத்தூர் என்றஇடத்தில் அவனைப் போலீஸார் கைது செய்தனர்.
அப்பு இப்போது ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டுள்ளான். இன்று மாலை அவன் காஞ்சிபுரம் கொண்டு வரப்படலாம் என்றுகூறப்படுகிறது.
ரவி சுப்பிரமணியம் கைதா?
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியத்தை தமிழக போலீஸ் படைடெல்லியில் வைத்து கைது செய்துள்ளதாக செய்திகள் பரவியுள்ளன.
ஜெயேந்திரருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் ரவி சுப்பிரமணியம். சங்கரட மடம் சார்பிலான காண்டிராக்டுகள் அனைத்தும் ரவிசுப்ரமணியத்திற்கே கொடுக்கப்படுவது வழக்கம்.
சங்கரராமனைக் கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் இவர்தான். சங்கராச்சாரியார் உத்தரவுப்படி கட்டடம் கட்டகொடுக்கப்பட்ட ரூ. 65 லட்சத்தில் ரூ. 15 லட்சத்தை கொலையாளிகளுக்குத் தந்துள்ளார்.
தலைமறைவாகி விட்ட ரவி சுப்ரமணியத்தைப் பிடிக்க போலீஸ் படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.டெல்லியில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு ஒரு போலீஸ் படை சென்றுள்ளது.
இந் நிலையில் நேற்று ரவி சுப்ரமணியம் கைது செய்யப்பட்டு விட்டதாகத் தகவல் வருகின்றன. இதை காவல்துறை வட்டாரங்கள்மறுக்கவோ, உறுதி செய்யவோ மறுத்துவிட்டன.
இன்று அவர் சென்னைக்கு கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.