சதுர்வேதியின் 25 பவுன் அறைஞான் கயிறு!
சென்னை:
பிரேமானந்தாவுக்கெல்லாம் பிரேமானந்தாவாகக் கருதப்படும் சதுர்வேத சாமியாரிடம் கைப்பற்றப்பட்ட நகைக் குவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பெண்களிடம் செக்ஸ், ஓரினச் சேர்க்கை, ஆள் கடத்தல், தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு என ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டியுள்ள சதுர்வேத சுவாமிகளின் கனரா வங்கி லாக்கரை போலீசார் சோதனையிட்டபோது ஏகப்பட்ட தங்க, வைர, வெள்ளி நகைகள் சிக்கின.
அதன் லிஸ்ட்:
1. தங்க பூணூல்- 35 பவுன்
2. தங்க அறைஞான் கயிறு- 25 பவுன்
3. பஞ்சாயுத மாலை- 35 பவுன்
4. கவச குண்டலம்- 10 பவுன்
5. கை காப்புகன்- 50 பவுன்
6. சங்கு, சக்கர தோடு- 5 பவுன்
7. தாமரை மணி மாலை- 10 பவுன்
8. தங்க கிருஷ்ணர் சிலை- 10 பவுன்
9. ராமானுஜர் சிலை- 10 பவுன்
10. வைரங்கள் பதிக்கப்பட்ட 6 மோதிரங்கள்
11. கைவங்கி- 10 பவுன்
12. மரகதம் உள்ளிட்ட ராசிக் கற்கள்
இதைத் தவிர டம்ளர் உள்ளிட்ட வெள்ளியில் ஏகப்பட்ட பொருட்களும் லாக்கரை நிறைத்திருந்தன.
இவை அனைததும் சைதாப்பேட்டை நீதிமன்றத்திடம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிடிபட்ட இந்த நகைகளை உடல் முழுவதும் அணிந்து கொண்டு, கிருஷ்ணர் வேடமும் போட்டுக் கொண்டு, கையில் புல்லாங்குழலையும் வைத்துக் கொண்டு பக்தைகளிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவது சதுர்வேதியின் வேலையாக இருந்து வந்தது.
இந்த நகைகள் தவிர ஆந்திரா, கர்நாடகம், தமிழகத்தின் முக்கிய நகர்களில் பல கோடி மதிப்புக்கு பங்களாக்கள், நிலங்களும் சதுர்வேதிக்குச் சொந்தமானவையாக உள்ளன. இதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன.
மக்களை நல்வழிப்படுத்த வந்த இந்த சாமியாரிடம் உள்ள கார்களின் எண்ணிக்கை 4. இதில் ஒன்று பென்ஸ் கார்.
இந்த நகைகள், சொத்துக்கள், கார்கள் அனைத்தும் பக்தர்களிடம் இருந்து சதுர்வேதி பல வகைகளிலும் பறித்தது என்கிறார்கள்.
சதுர்வேதியின் மோசடிகள் குறித்து சென்னை துணை கமிஷ்னர் ராஜேந்திரன், உதவி கமிஷ்னர் அன்புமொழி ஆகியோர் தலைமையிலான படைகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்தப் படையின் அதிகாரிகளைச் சந்திக்கும் பல பெண்களும் ஆண்களும் தாங்கள் சதுர்வேதியிடம் மோசம் போனதை பட்டியலிட்டு வருகிறார்கள்.