வீரப்பன்...தொடரும் ஜெவின் பரிசு மழை
சென்னை:
வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் உதவிய மேலும் பல காவல்துறை, வனத்துறையினர், இமாம் அலியைக் கொன்ற படையில் இருந்தவீரர்கள் ஆகியோருக்கும் முதல்வர் ஜெயலலிதா ரொக்கப் பரிசுகள், வீட்டு மனைகள், பதவி உயர்வுகளை அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் அவரவருக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்பது என்எண்ணம். இதன் அடிப்படையில் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் துணை எஸ்.பியாக இருந்த சைலேந்திரபாபுவின் தலைமையின் கீழ் 1989ம் ஆண்டு டிசம்பர்5ம் தேதி ஒரு படை காட்டுக் கொள்ளையன் வீரப்பன் கும்பல்ை பிடிக்கச் சென்று அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டது.
அந்த மோதலில் இப்போது சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணிபுரியும் ஜெயக்குமார், கோவை குடிமங்கலம்காவல் நிலைய ஏட்டு பழனிச்சாமி ஆகிடோர் குண்டுக்காயம் அடைந்தனர்.
இந்த இருவருக்கும் இப்போது வீர விழுப்புண் பதக்கம் வழங்கப்படுகிறது. அத்தோடு தலா ரூ. 3 லட்சமும் வீட்டு மனையும் வழங்கப்படும்.
இந்தப் படைக்கு தலைமை ஏற்றுச் சென்ற இப்போதைய சென்னை நகர இணை கமிஷ்னர் சைலேந்திரபாபுவுக்கும் ரூ. 3 லட்சம், வீட்டுமனை, பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.
இதே போல அதிரடிப்படையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி, தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து செயல்பட்ட வெள்ளைதுரை,ஆம்புலன்ஸை ஓட்டி வந்த டிரைவர் சரவணன், குமரேசன் ஆகியோருக்கு மேலும் ஒரு படி பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
எஸ்.ஐ ஆக இருந்த வெள்ளைதுரை வீரப்பன் ஆபரேசனுக்குப் பின் சமீபத்தில் இன்ஸ்பெக்டர் ஆக்கப்பட்டார். இப்போது அவருக்கு மேலும்ஒருபடி பதவி உயர்வு தரப்படுகிறது. இதன் மூலம் அவர் டி.எஸ்.பியாக பதவி உயர்த்தப்படுகிறார்.
டிரைவராக இருந்த சரவணனுக்கு தலைமைக் காவலராக பதவி உயர்வு தரப்பட்டது. இப்போது அவர் ஆயுதப்படை எஸ்.ஐ. ஆகநியமிக்கப்படுகிறார். அதே போல குமரேசனுக்கு தலைமைக் காவலர் பதவி தரப்படுகிறது.
இதைப் போலவே வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட பிற காவல்துறையினர் 93 பேருக்கும் சிறப்பு அதிரடிப்படைப் பங்கேற்புபதக்கம் வழங்கப்படும்.
1991ம் ஆண்டு முதல் 94ம் ஆண்டு வரை வீரப்பன் குறித்த ரகசிய தகவல்களை சேகரிக்க உதவிய பவானி சாகர், கோபிச்செட்டிப்பாளையம், மேட்டூர், சத்தியமங்கலம் ஆகிய காவல் நிலையங்களின் க்யூ பிரிவு போலீசாருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 2 லட்சம் வரைரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இந்தப் பகுதியில் காவல் நிலையங்களில் பணியாற்றிய பிற அதிகாரிகள், காவலர்கள் 196 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.இவர்களில் வீரப்பன் கும்பலுடன் மோதலில் ஈடுபட்ட 163 காவலர்களுக்கு ஒரு படி பதவி உயர்வும் அளிக்கப்படும்.
வீரப்பனைப் பிடிக்க உதவிய வனத்துறையினர் 4 பேருக்கு ஒரு படி பதவி உயர்வும், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் அளிக்கப்படும்.
தமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவர் மாறனைக் கைது செய்ய உதவிய உளவுப் பிரிவு, க்யூ பிரிவு அதிகாரிகள், காவலர்கள் 11 பேருக்குஊதிய உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்படும்.
தீவிரவாதி இமாம் அலியை சுட்டு வீழ்த்திய 19 வீரர்களுக்கும் ஒருபடி பதவி உயர்வும் ரூ. 1,75 லட்சமும் வழங்கப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.