தாக்குதலுக்கு சங்கர மடமே காரணம்: ஆடிட்டர் புகார்
சென்னை:
தன் மீது நடந்த கொலை வெறித் தாக்குதலுக்கு சங்கர மடம் தான் காரணம் என்று ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த ஆண்டேபோலீசாருக்குத் தகவல் தெரிவித்ததாக இன்று நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட லட்சுமணன், பூமிநாதன், சுந்தர், ஆனந்த்குமார், கண்ணன்,சின்னக்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு இன்று சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த 6 பேர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிக்குமார் பேசுகையில்,
2 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்துக்கு சங்கரராமன் கொலையில் கைதான கதிரவன் தந்த வாக்குமூலத்தை வைத்து இப்போது இந்த 6பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது போலீஸ்.
ஆனால், கதிரவனோ தான் கொடுக்க ஒப்புதல் வாக்குமூலத்தை மறுத்துள்ளான். அதை அடிப்படையாக வைத்து இவர்களைக் கைதுசெய்ததே தவறு. இவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.
இதை மறுத்துப் பேசிய அரசு வழக்கறிஞர் துரைசாமி, இந்த வழக்கில் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இப்போது இந்த 6 பேர்தவிர சங்கராச்சாரியார், கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பு, ரவி சுப்பிரமணியம் தலைமறாைக உள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இப்போது தான் குற்றவாளிகள் யார் என்ற அடையாளம் தெரிந்தது.
கடந்த ஆண்டு போலீசாருக்கு ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் இரண்டு கடிதங்களை அனுப்பினார். அதில் தன் மீது நடந்த கொலை வெறித்தாக்குதலுக்கு சங்கரமடம் தான் காரணம் என்றும், இனிமேல் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கும் மடம் தான்பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார் ராதாகிருஷ்ணன் என்றார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.