நக்கீரன் மீது பாய்கிறது பாஜக
சென்னை:
ஜெயேந்திரர் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் வீடியோ புகைப்படங்களை நக்கீரன் பத்திரிக்கைக்கு கொடுத்தபோலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சி கோரியுள்ளது.
பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் ராஜேந்திரன் இதுதொடர்பாக வெளியிட்டுள் அறிக்கையில், போலீஸில் ஒருவர் அளிக்கும்வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. வாய் மூலமாகவோ அல்லது எழுத்துமூலமாகவே வாக்குமூலம் தர வேண்டும் என்றுதான் சட்டத்தில் உள்ளது.
ஆனால் ஜெயேந்திரர் வழக்கில் புலன் விசாரணை என்ற பெயரில் அவரை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசும்,காவல்துறையும். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜெயேந்திரர் விஷயத்தில் போலீஸார் சட்டவிரோதமாக நடக்கிறார்கள். மனித உரிமைகளுக்கு மாறாக அவர்கள் புலன்விசாராணை நடத்துகின்றனர்.
உண்மையான குற்றவாளிகள் மீது குற்றம் சுமத்தாமல், ஜெயேந்திரர் பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும், அவரைப்பற்றி ஆபாசமான செய்திகளை வெளியிடுவதுமே புலன் விசாரணையின் நோக்கமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
கதிரவன் கொடுத்த வாக்குமூலம் உடனடியாக பத்திரிக்கைகளில் வெளியானது. இதை பத்திரிக்கைகளுக்குக் கொடுத்தது யார்என்று விசாரிக்க வேண்டும். அதேபோல, ஜெயேந்திரர் அளித்த வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டு அதில் சிலவற்றைபுகைப்படங்களாக ஒரு வாரப் பத்திரிக்கை (நக்கீரன்) வெளியிட்டுள்ளது.
இது சட்டவிரோதமான செயல். போலீஸாரைத் தவிர வேறு யாரும் இந்தப் படங்களை அப்பத்திரிக்கைக்குக் கொடுத்திருக்கமுடியாது. உள்நோக்கத்துடன் கூடிய செயல் இது. அந்தப் படங்களைப் பார்க்கும் இந்துக்கள் மட்டுமன்றி, நாகரிக மனம் உடையஅனைவரது மனங்களும் புண்படும்.
போலீஸ் விசாரணை, பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற பெயரில் தனிப்பட்ட ஒருவரது கண்ணியத்தை மீறும் செயலை யாரும்அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார் ராஜேந்திரன்.