கலாம் நேரில் அஞ்சலி
டெல்லி:
மறைந்த இசைக் குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் உடலுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அஞ்சலி செலுத்தினார்.
எம்.எஸ்.ஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அப்துல் கலாம் இன்று மாலை 3.30 மணிக்குசென்னை வந்தார். விமான நிலையத்திலிருந்து நேராக அவர் எம்.எஸ்.ஸின் இல்லத்திற்குச் சென்றார்.
அங்கு எம்.எஸ். உடலுக்கு கலாம் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.அதனையடுத்து நிருபர்களிடம் சுருக்கமாக பேசிய கலாம், எம்.எஸ்ஸின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பு. இசைத்துறைக்கு அவர் ஆற்றியதொண்டு ஒப்பற்றது. அவர் ஒரு பிறவிக் கலைஞர் என்று கூறினார்.
கலாமுடன் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாவும் உடன் வந்திருந்தார். இருப்பினும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலாம் கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கலாம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நமது காலத்தில் ஒப்பற்ற இசை மேதையாக விளங்கிய ஒருவரை நாம்இழந்துவிட்டோம். இசையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு தனித்தன்மை வாய்ந்தது. அவரது பாடல்கள்லட்சக்கணக்கானவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷெகாவத் இரங்கல்:
துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் வெளியிட்ட இரங்கற் செய்தியில், எம்.எஸ். இசையுலகில் விலைமதிக்கமுடியாத ஆபரணமாக விளங்கினார். இவர் போன்றவர்கள் ஒரு முறைதான் பிறப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மன்மோகன் அஞ்சலி:
பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட இரங்கற் செய்தியில், உண்மையிலேயே இந்தியாவின் நைட்டிங்கேலாக எம்.எஸ்.விளங்கினார். பாடும்போது அவரும், அதைக் கேட்பவர்களும் கடவுளுக்கு நெருக்கமாக வருகிறார்கள் என்று மகாத்மா காந்திகூறியது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.
பிரதமராக இருந்தால் என்ன, இந்த இசையுலக ராணி முன் நான் எம்மாத்திரம் என்று நேரு கூறினார். அத்தகையவரின் மறைவுஎன்னை வெகுவாக பாதித்துள்ளது. அவர் மறைந்தாலும் அவரது குரல் நூற்றாண்டுகள் தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கும் என்றுகூறியுள்ளார்.
ஆளுநர் இரங்கல்:
ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்ட இரங்கற் செய்தியில், எம்.எஸ்.சுப்புலட்சுமி மறைவு கர்நாடக இசையுலகத்திற்குமட்டுமல்ல, மொத்த இசையுலகிற்கும் பேரிழப்பாகும். இசையுலகில் ஒரு சகாப்தமாக வாழ்ந்த அவர், எளிமை மற்றும்அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக போற்றப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
ராம்மோகன் ராவ் இரங்கல்:
முன்னாள் ஆளுநர் ராம்மேகான் ராவ் வெளியிட்ட இரங்கற் செய்தியில், இந்தியா 20ம் நூற்றாண்டின் மகத்தானசாதனையாளர்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவர் தனது தெய்வீக குரலினால் இந்திய மற்றும் உலக ரசிகர்களுக்கு அளவிடமுடியாத ஆனந்தத்தை அளித்து வந்தார் என்று கூறியுள்ளார்.
மேலும் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.