குட்டிச்சுவர் ஆக்காதீங்கோ..: சுந்தரேச அய்யர் கோபம்
வேலூர்:
சிறையில் இருக்கும் சங்கராச்சாரியாரை விஜயேந்திரர் ஏன் இன்னும் வந்து சந்திக்கவில்லை என்று கேட்ட நிருபருக்கு மடத்தின்நிர்வாகியான சுந்தரேச அய்யரிடம் இருந்து கடி கிடைத்தது.
இதுவரை 8 முறை போலீசாரால் அழைத்து விசாரிக்கப்பட்ட அய்யர் வேலூர் சிறைக்குச் சென்று ஜெயேந்திரரைச் சந்தித்தார்.அவருடன் ஜெயேந்திரரின் தம்பி விஸ்வநாத அய்யரின் மகன் விட்டல் ராஜன், மருமகன் சுந்தர் ஆகியோரும் சென்றனர்.
சிறைக்கு வெளியே சுந்தரேச அய்யரை நிருபர்கள் மொய்த்தனர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும்:
நிருபர்: ஜெயேந்திரர் எப்படி இருக்கிறார்?
சுந்தரேச அய்யர்: நல்லா இருக்கார்
நிருபர்: சங்கராச்சாரியாரை இளையவர் இன்று வந்து சந்திக்கப் போவதாக தகவல் வந்ததே?
சுந்தரேச அய்யர்: அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.
நிருபர்: ஜெயேந்திரரைப் பார்க்க இளையவர் ஏன் வரவில்லை? அவரைப் பார்க்க விரும்பவில்லையா?
சுந்தரேச அய்யர்: இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டு இருக்குறதையும் குட்டிச் சுவர் ஆக்காதீங்க.... உங்க பேரு என்ன..? நீங்கஎந்தப் பத்திரிக்கை நிருபர்...?
நிருபர் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காரில் ஏறிப் பறந்துவிட்டார் சுந்தரேச அய்யர்.
இச் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த உளவுப் போலீஸ் அதிகாரியொருவர் கூறுகையில், உங்களிடம் மட்டுமல்ல. போலீசார்விசாரணை நடத்தியபோது அவர்களிடம் கூட இப்படித்தான் கோபத்தில் வார்த்தைகளை விட்டார் சுந்தரேச அய்யர். பதிலுக்குபோலீஸ் தரப்பில் இருந்து இடியாக வார்த்தைகள் வந்து விழுந்த பிறகே அடங்கினார் என்றார்.