சீன வானொலி: முதலிடத்தில் தமிழ்ச் சேவை
மதுரை:
சீன அரசு வானொலியின் தமிழ் சேவை நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் 3.5 லட்சம் கடிதங்கள் வருவதாக அதன் பொறுப்பாளர்கள்கூறியுள்ளனர்.
சீன அரசு நடத்தும் 38 உலக மொழிகளின் வானொலி சேவைகளில் மிக வெற்றிகரமானதாக தமிழ்ச் சேவை விளங்குகிறது. தமிழ்நிகழ்ச்சிகளைக் கேட்பவர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகமாக உள்ளது.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ் மற்றும் பல நாடுகளிலும் தமிழர்கள் இந்த நிகழ்ச்சிகளை விரும்பிக்கேட்கின்றனர். தமிழகத்திலும் மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது.
ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து மட்டும் 3.5 லட்சம் கடிதங்கள் இந்த வானொலி சேவைக்கு அனுப்பப்படுகின்றன.
சீனாவின் இந்த வானொலிப் பிரிவில் 11 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 10 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும்முறையாகத் தமிழ் கற்றவர்கள். மேலும் தங்களது பெயர்களையும் தூய தமிழில் மாற்றிக் கொண்டவர்கள்.
இந்த ஒலிபரப்புப் பிரிவின் துணைத் தலைவர் கலைமகள் (27 வயதான இவரது இயற்பெய் ஸாவோ ஜியாங்), செய்தியாளர் வாணி (33வயது, இயற்பெயர் கைஜென்) ஆகியோர் மதுரை வந்துள்ளனர்.
மதுரையில் நிருபர்களைச் சந்தித்த இவர்கள் அழகிய தமிழில் பேசி ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
தங்களது வானொலியின் தமிழ்ச் சேவை குறித்து இவர்கள் கூறியதாவது:
இலக்கியச் செழுமையும் பழம் பெருமையும் கொண்டது தமிழ் மொழி. அது மட்டுமல்ல பேசவும் எழுதவும் மிகவும் இனிமையான மொழிஇது. இப்போது தமிழ்ச் சேவை தான் சீன வானொலி நடத்தும் பிற மொழிச் சேவைகளில் முதலிடத்தில் உள்ளது.
ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து 3.5 லட்சம் நேயர்கள் எங்கள் தமிழ்ச் சேவைக்கு கடிதங்கள் எழுதுகிறார்கள் என்றனர்.
இந்தத் தமிழ்ச் சேவை குறித்து மேலும் அறிய ஆவலா? [email protected]என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.