புதுவை கண்ணன் மீண்டும் போர்க்கொடி
பாண்டிச்சேரி:
புதுவையில் கொஞ்ச நாளாக அமைதியாக இருந்து வந்த "புரட்சித் தலைவர்" புதுவை கண்ணன் மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த கண்ணன், பின்னர் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தபோது அதில்இணைந்தார். பின்னர் தமாகா மீண்டும் காங்கிரஸுடன் இணைந்தபோது அதில் இணையாமல் தனிக் கட்சி ஆரம்பித்தார்.
பின்னர் சோனியா முன்னிலையில் மீண்டும் காங்கிரஸுக்கு வந்தார். காங்கிரஸில் சேர்ந்தாலும் அவ்வப்போது அரசுக்கு எதிராகவும், கட்சித்தலைமைக்கு எதிராகவும் கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்துவது கண்ணனின் வழக்கம். அடிக்கடி கட்சியில் புரட்சியை ஏற்படுத்துவதால்அவருக்கு புதுவையில் செல்லமாக புரட்சித் தலைவர் என்று ஒரு பெயர் உண்டு.
சமீப காலமாக கண்ணன் சப்தமே இல்லாமல் அமைதியாக இருந்து வந்தார். இந் நிலையில் புதுவை அரசு குறித்து சரமாரியாக அவர் புகார்கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவைப் பொதுப்பணித்துறையில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துவருகிறது.
எவ்வளவு பணம் திட்டத்திற்காக ஒதுக்கினாலும் அதில் ஊழல் செய்கிறார்கள் அதிகாரிகள். அரசும் அமைதியாக இருக்கிறது.
புதுவையில் காங்கிரஸ் அரசுதான் நடந்து வருகிறது. ஆனாலும், என்னால் குறைகளை சுட்டிக் காட்ட முடியாமல், திருத்த முடியாமல்துரதிர்ஷ்டவசமான நிலையில் நான் இருக்கிறேன்.
சட்டம், ஒழுங்கு நிலை சீர்கெட சில காவல்துறை அதிகாரிகளே காரணமாக உள்ளனர். இது அரசுக்கும், முதல்வருக்கும் தெரியாமல் இல்லை.போலீஸ் பயமே இல்லாமல் பல கொலைகள் நடக்கின்றன. ஆயுதங்களுடன் ஒரு கூட்டம் அரசுக் கட்டிலுக்கு அருகே உலவிக்கொண்டுள்ளது.
குற்றங்களில் சம்பந்தப்பட்ட பலர் அமைச்சர்களின் அறைகளில் அமர்ந்து பேசிக் கொண்டுள்ளார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள்படித்து விட்டு வேலையில்லாமல் வீதியில் திரிகின்றனர். ஆனால் குறிப்பிட்ட அமைச்சர் ஒருவருக்கு மட்டும் தான் அரசு வேலைக்குஆட்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது.
தேவைப்பட்டால் இளைஞர்களை ஒன்று திரட்டி போராட வேண்டியது வரும். அது போர்க்குரலாகவும் இருக்கலாம். காங்கிரஸ்பெயரையும், சோனியா பெயரையும் காப்பாற்ற அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். இந்த ஆட்சியை மாற்ற முயற்சிக்க வேண்டும்என்றார் கண்ணன்.