ஜெவுக்கு கருணாநிதி கிண்டல் பதில்
சென்னை:
சுயநலக்காரர்களுக்கு தமிழகத்தில் பஞ்சமே இல்லை என்று தன் கதை மூலமாக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திற்கு சிறப்பு முதன்மைத்தகுதியை வழங்கியிருக்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கிண்டலடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் ஜெயலலிதா ஒரு கதை சொன்னார். சிலந்தி இழையைப் பிடித்து மேலே ஏறியவன், பாதிவரை வந்துவிட்ட பிறகு கீழே பார்க்கும்போது, அவனைப் போலவே பல பேர் மேலே வந்து கொண்டிருப்பதைக் கண்டான் என்று கூறினார்ஜெயலலிதா.
வீரப்பனைப் பிடித்தது நான்தான், புதிய வீராணம் திட்டத்தைக் கொண்டு வந்தது நான்தான், ஜெயேந்திரரைக் கைது செய்தது நான்தான்,தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டுவது நான்தான், இதை மற்றவர்கள் கொண்டாடுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்பதுபோல் இக்கதை உள்ளது.
சுயநலக்காரர்களுக்குத் தமிழகத்தில் பஞ்சமே இல்லை. அவர்களிடம் பொறாமைக்கும் பஞ்சமே இல்லை என்று கூறி தமிழகத்துக்கு சிறப்புமுதன்மைத் தகுதியை ஜெயலலிதா வழங்கியிருக்கிறார்.
இப்படி ஜெயலலிதா முழங்கியது பாரதியார் உயிரோடு இருந்து அவர் காதில் விழுந்திருக்குமேயானால், செந்தமிழ் நாடெனும் போதினிலேதுன்பத் தேள் வந்து கொட்டுது காதினிலே என்று கண்கலங்க கவிதை பாடியிருப்பார் என்று கருணாநிதி கூறினார்.