ஐசிஐசிஐ: பணம் எடுத்த ஆதாரம் சிக்கியது!
காஞ்சிபுரம்:
சங்கரராமனைக் கொன்ற கூலிப் படையினருக்கு ஐசிஐசிஐ வங்கியில் இருந்து பணம் தரப்பட்டது தொடர்பான முக்கியமான ஆதாரம்போலீசிடம் சிக்கியுள்ளது.
சங்கரராமனைக் கொன்ற கூலிப் படையினருக்கு, காஞ்சிபுரம் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து பணம் தரப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறிவருகிறது.
ஆனால் கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, காஞ்சி மடத்திற்கு ஐசிஐசிஐ வங்கியில்கணக்கு எதுவும் இல்லை என்று ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வங்கி ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில், சங்கர மடத்தின் கீழ் வரும் கடிகாஸ்ரமம் அறக்கட்டளையின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 15 லட்சம் பணம் 2நாட்களில் எடுக்கப்பட்டது தொடர்பான முக்கிய ஆதாரம் போலீசிடம் சிக்கியுள்ளது.
கடிகாஸ்ரமம் அறக்கட்டளைக்கு சங்கர மட வளாகத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் கணக்கு உள்ளது. இந்த கணக்கிலிருந்துசங்கரராமன் கொலை செய்யப்பட்ட நாளில் ரூ. 5 லட்சம், போலி குற்றவாளிகள் 5 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த நாளில் ரூ. 10லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தக் கணக்கில் இருந்து சென்னையில் உள்ள ஒரு காண்டிராக்டரின் பெயரில் இரண்டு செக்குகள் கொடுக்கப்பட்டதற்கானஆதாரமும் போலீஸ் வசம் சிக்கியுள்ளது.
இந்தப் பணம் காண்ட்ராக்டர் மூலம் கூலிப் படையினருக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. இதற்கான ஆதாரமாக கொலைக் கும்பலின்வாக்குமூலம் உள்ளது.
தற்போது சங்கர மட வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் போலீஸார் கைப்பற்றிவிட்டனர். இந்தஆதாரத்தை ஜனவரி 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.