2வது டெஸ்டிலும் இந்தியா இன்னிங்க்ஸ் வெற்றி
சிட்டகாங்:
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டாக்காவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, 1-0 என்ற முன்னிலையில் சிட்டகாங் போட்டியில் களமிறங்கியது.டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் பிடித்தது. மொத்தம் 150 ஓவர்கள் விளையாண்டு, 540 ரன்களைக் குவித்தது.
கெளதம் காம்பீர் 139 ரன்களும், டிராவிட் 160 ரன்களும், கேப்டன் கங்குலி 88 ரன்களும் எடுத்தனர். வங்கதேசத்தின் ரபீக் 4 விக்கெட்களைவீழ்த்தினார். அடுத்து ஆடிய வங்கதேசம் 333 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பாலோ ஆன் பெற்றது.
அஷ்ரபல் மட்டும் நிலைத்து ஆடி 158 ரன்கள் குவித்தார். இந்தியாவின் சார்பில் கும்ப்ளே 4 விக்கெட்களையும், ஜாகீர்கான், பதான் தலா 2விக்கெட்களையும் சாய்த்தார்.
தொடர்ந்து 2வது இன்னிங்க்ஸை ஆடிய வங்கதேசம் பதானின் வேகப்பந்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 124 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்களையும் இழந்தது. பதான் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனால் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 83 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா 2வது போட்டியையும் வென்றது. அஷ்ரபல் ஆட்டநாயகனாகவும்,பதான் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒரு நாள் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்குகின்றன. முதல் போட்டி சிட்டகாங்கிலும், 2வது போட்டி மற்றும் 3வது போட்டி 26ம் தேதிமற்றும் 27ம் தேதிகளில் டாக்காவில் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறுகிறது.