"பாஸ்" இல்லாமல் "மூச்சா" போனால் ரூ. 500 அபராதம்!
சென்னை:
சென்னை அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில், கழிவறைகளை பயன்படுத்துவதற்கு மாணவர்கள் பாஸ் வாங்க வேண்டும். பாஸ்இல்லாமல் சிறுநீர் கழித்தால் அவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால் மாணவர்கள்அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னைகிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கல்லூரி நிர்வாகத்தின் அராஜகப் போக்கைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். கல்லூரிநிர்வாகம் மீது மாணவர்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்தாலும் அதில் ஒரு புகார் மிகவும் வித்தியாசமானது, அநியாயமானது.
அதாவது, கல்லூரி மாணவர்கள் சிறுநீர் கழிக்க விரும்பினால் அதற்கென்று கல்லூரி நிர்வாகம் வழங்கியுள்ள பாஸை, வகுப்புஆசிரியடமிருந்து பெற வேண்டும். அதன் பிறகுதான் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும்.
கல்லூரி வளாகத்தில் ஊழியர் ஒருவர் எப்போதும் ரவுண்ட்ஸ் வந்தபடி இருப்பார். அவர் கேட்கும்போது பாஸைக் காட்ட வேண்டும். பாஸ்இல்லாமல் கழிப்பறைக்குச் செல்லும் மாணவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். எவ்வளவு அவசரமாக இருந்தாலும் பாஸ்இல்லாமல் சிறுநீர் கழிக்கவோ, கழிப்பறைக்குச் செல்லவோ முடியாது.
கல்லூரி வளாகத்தில் மொத்தம் 2 கட்டடங்கள் உள்ளன. இதில் ஒரு கட்டடத்தில்தான் கழிப்பறை வசதி உள்ளது. இதனால் மாணவர்கள்மிகவும் சிரமப்படுகிறோம் என்று மாணவர்கள் குமுறினர்.
போராட்டம் நடத்திய மாணவர்கள் பின்னர் தொழில்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குநர் ஜெயச்சந்திரனை சந்தித்து மனுகொடுத்தனர். மனுவில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என ஜெயச்சந்திரன் மாணவர்களுக்கு உறுதி அளித்தார்.