ஆந்திர நிதி நிறுவனத்தில் அப்பு ரூ.3 கோடி மோசடி
நகரி:
ஆந்திராவில் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.3 கோடி அளவுக்கு அப்பு மோசடி செய்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகஅவருக்கு ஜாமீன் கொடுத்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1994-ம் ஆண்டு நெல்லூர் மாவட்டம் அக்கம்பேட்டை கிராமத்தில் ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலையை நடத்த ஆந்திர அரசுக்குசொந்தமான ஸ்டேட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிதி நிறுவனத்திடம் அப்பு ரூ. 1 கோடி கடன் வாங்கி இருந்தான்.
அப்பு ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை தொடங்கிய இடத்தில் சூபினா கினி ஆஸ்பெஸ்டாஸ் என்ற தொழிற்சாலை இருந்தது. அந்த நிறுவனம்ஏலத்துக்கு வந்த போது அப்பு அதை வாங்கினான்.
மந்த்ராலயம் ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை என்று பெயர் மாற்றம் செய்து, அதை இயக்குவதற்கு முதலில் ரூ. 41 லட்சமும் பின்பு ரூ. 48லட்சமும் கடன் வாங்கியுள்ளான்.
அப்பு கடன் வாங்கிய நிறுவனத்துக்கு தடா பகுதியில் கிளை உள்ளது. ஆனால் கடன் வாங்க அப்பு இங்கே வராமல் தனது செல்வாக்கைப்பயன்படுத்தி, ஹைதராபாத் அலுவலகத்திலேயே எல்லா வேலையை முடித்து விட்டான்.
இதனால் அப்புவை கடன் வழங்கும் போது மட்டுமே பார்த்தோம் என்று தடா மண்டல கிளை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வாங்கிய கடனுக்கு ரூ. 20 லட்சம் வட்டியும், ரூ. 10 லட்சம் அசலும் மட்டுமே அப்பு திருப்பி செலுத்தியுள்ளான். தற்போது இந்தக் கடன்வட்டியுடன் சேர்ந்து ரூ.3 கோடியாக உயர்ந்துள்ளது.
அப்புவிடம் இருந்து இந்தக் கடனை வசூலிக்க முடிவு செய்த ஆந்திர நிதி நிறுவன அதிகாரிகள் இது தொடர்பாக தமிழக போலீஸாருடன்தொடர்பு கொண்டு அப்புவின் சொத்து விவரங்களை விசாரித்து வருகிறார்கள்.
இந்தக் கடன் வாங்க அப்புவுக்கு சென்னை பெரம்பூரைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் சூரிட்டி ஜாமீன் கொடுத்துள்ளார்.
அப்பு கடனை திருப்பி செலுத்தாததால் அவனுக்கு ஜாமீன் கொடுத்த நிர்மலாவிடமும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.