குளச்சல் கடலில் மிதக்கும் உடல்கள்!!
கன்னியாகுமரி:
மாநிலத்தில் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் 625 பேர் பலியானதாக கணக்குசொல்லப்படுகிறது. ஆனால், சுனாமி தாக்கி 3 நாட்களாகிவிட்ட பின்னரும் கடலில் பல உடல்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
கிருஸ்துவ மக்களே பெரும்பாலும் நிறைந்த குளச்சல் பகுதியில் முதல் நாள் கிருஸ்துமஸ் கொண்டாடிவிட்டு ஞாயிற்றுக்கிழமையன்று அதேஉடைகளுன் விளையாடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான குட்டிக் குழந்தைகளை பேரலைகள் வந்து இழுத்துச் சென்றுள்ளன.
என்னைப் போன்ற மூதாட்டிகளை விட்டுவிட்டு சின்னப் பிள்ளைகளை கடல் முழுக்கியது ஏனோ என்று சொல்லிவிட்டு மண்ணில் விழுந்துபுரண்டு அழுகிறார் ஒரு பாட்டி.
கடல் அலைகளால் பாதிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் ஓடி வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
வீடுகளில் முடிந்தவரை கூடுதலாக சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் வீட்டு ஆண்கள், குழந்தைகள் மூலம் அனுப்பி வைத்துவருகின்றனர் இப் பகுதி தாய்மார்கள்.
தங்களுக்கு உணவும் மாற்று உடைகளும் எடுத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் நடந்து வருபவர்களை கட்டிப் பிடித்து அழுகின்றனர்பாதிக்கப்பட்ட மக்கள்.