நாகப்பட்டிணம்: 77 கிராமங்கள் கூண்டோடு காலி!
நாகப்பட்டிணம்:
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 77 கடலோர கிராமங்கள் மொத்தமாக அழிந்து போய்விட்டன. இதில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள்பலியாகியுள்ளனர்.
இதில் சுமார் 1,000 உடல்கள் வரை மீட்கப்பட்டாலும் மீதியுள்ளவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை. இவற்றில் பல கடலுக்குள் அவைஇழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் மற்றவைமண்ணோடு மண்ணாக புதைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கொள்ளிடத்தில் இருந்து வேதாரண்யம் வரை கடற்கரையில் இருந்து 1. கி.மீ. தூரத்துக்குள் இருந்த சுமார் 77 மீனவ கிராமங்களில் 10,000பேர் வசித்து வந்தனர்.
சுனாமி தாக்குதலில் இந்த கிராமங்களில் இருந்த வீடுகள், குடிசைகள், கால்நடைகள் என எதுவும் மிஞ்சவில்லை. கிராமங்கள் இருந்ததற்கானசுவடே இல்லை.
இப் பகுதிகளில் சுமார் ஆயிரம் பேரின் உடல்கள் ஆடு, மாடுகளின் உடல்களுடன் சேர்ந்து முட்புதர்களிலும் இடிபாடுகளுக்கு இடையிலும்சிக்கிக் கிடக்கின்றன. மற்றவர்களின் உடல்களைக் காணவில்லை.
இந்தப் பகுதியை நேற்று தான் நிருபர்களே எட்ட முடிந்தது. நிவாரணக் குழுக்கள் நேற்று மாலை வரை இந்தப் பகுதிக்கு வரவில்லை.
உயிர் பிழைத்த சிலரே ஆங்காங்கே குழிகளைத் தோண்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரின்உடல்களையும் ஒட்டு மொத்தமாக குழிகளில் புதைத்த வண்ணம் உள்ளனர். நாகப்பட்டிணம், நாகூர், வேதாரண்யம், கோடியக்கரை,பூம்புகார், காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் பெரிய குழிகள் தோண்டப்பட்டு உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்டுள்ளன.
உணவு, தண்ணீர் இல்லாததால் இவர்களாலும் அதிக குழிகள் தோண்ட முடியாமல் களைத்துப் போய் அழுதபடியே அமர்ந்துள்ளனர்.பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்தபடி அழுது அரற்றி வருகின்றனர்.
வழியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வாகனங்களும் தூக்கி வீசப்பட்டன. அலை வந்தபோது கடலில் ஆயிரக்கணக்கானவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். இதில் 700 உடல்களே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
இப் பகுதி மக்களின் கணக்கின்படி நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உயிர் சேதம் 20,000 வரை கூட இருக்கலாம் என்கின்றனர். அடையாளம்காண முடியாத உடல்களை வருவாய்த்துறையினர் புகைப்படம் எடுத்துவிட்டு புதைத்து வருகின்றனர்.
நாகப்பட்டிண கடலோரப் பகுதிகளில் கடல் பொங்கியதால் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. உடல்களைப்புதைக்க 10 அடிக்கு குழி தோண்டினாலே நீர் ஊற்றெடுத்து வந்துவிடுகிறது. இதனால் முடிந்தவரை தண்ணீரை வெளியேற்றிவிட்டு அந்தக்குழிகளில் உடல்கள் புதைக்கப்படுகின்றன.