ஐயோ!
சென்னை:
ஆயிரக்கணக்கான உடல்கள் நீரில் உப்பிப் போய் அழுக ஆரம்பித்துவிட்டன. இதனால் பல ஆயிரம் உடல்களை யாரும் அடையாளம்காணும் வரை வைத்திருக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதன் காரணமாக ஆங்காங்கே பெரிய குழிகள் தோண்டப்பட்டு அதில் மொத்தமாக உடல்கள் அடுக்கப்பட்டு மூடப்பட்டு வருகின்றன. பலஇடங்களில் பொது மக்கள் கையில் கிடைக்க மரக்கட்டைகளை வைத்து உடல்களை மொத்தமாக எரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் லாரிகளில் உடல்களை அள்ளிப் போட்டுக் கொண்டு செல்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி, திருமண மண்டபங்கள், சமூகக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுவழங்கப்படுகிறது. ஆனாலும் போதிய கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இரவில் பனிக் காற்று வீசுவதால் கைக் குழந்தைகளை வைத்திருப்போர், வயதானவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. உயிர்பிழைத்தவர்களின் பெரும்பாலானவர்களுக்கு வீட்டில் ஏதும் மிஞ்சவில்லை. வீடுகளே மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
இதனால் உடனடித் தேவையாக இவர்களுக்கு உடைகளும், கைச் செலவுக்கு சிறிய அளவிலான பணமும் தேவைப்படுகிறது. அரசும், சமூகஅமைப்புகளும் உணவை வழங்கினாலும் இதுவரை பெரும்பாலானவர்களுக்கு மாற்று உடைகளையோ, செலவுக்கு நிதியையோதரவில்லை.
இதனால் பிறந்த மண்ணிலேயே அகதிகளாக, அநாதைகளாக வாழும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சுனாமி அலைகளுக்கு உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பேர் மீனவர்கள் மற்றும் குடிசைவாசிகளே என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டிணம், கடலூர் பகுதிகளில் ராணுவப் படையினர், தீயணைப்புப் படையினருடன் பொது மக்களும் சேர்ந்து உடல்களை மீட்டுவருகின்றனர். நாகையில் இன்னும் தண்ணீரால் சூழப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள்போடப்பட்டன.
குப்பைபோடு குப்பையாய் கிடக்கும் பிணங்கள், உப்பிப் போய் அடையாளம் தெரியாமல் கிடக்கும் உடல்கள், சிதைய ஆரம்பித்துவிட்டஉடல்கள், முகத்திலும் கண்களிலும் முட்கள் குத்தி புதர்களில் கிடக்கும் பிணங்கள் என பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் காட்சிகள்உறைய வைத்துவிடுகின்றன.
10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து வந்த 3 மாபெரும் அலைகளில் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து 5,500ல் ஆரம்பித்து 10,000 வரை கணக்குகள் சொல்லப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நூற்றுக்கணக்கான உடல்களுக்கு இறுதி வழிபாடு நடத்திய பாதிரியாரும் கண்ணீர் விட்டுக் கதற,இதைக் கண்ட அப் பகுதியினர் அனைவரும் கண்ணீரில் ஆழந்தனர்.