இந்தோனேஷியாவில் 40,000 பேர் பலி!
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 40,000த்தைத் தாண்டியுள்ளதாக அந் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் யூசுப்கல்லா தெரிவித்தார். இதனால் தெற்காசியா முழுவதும் மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 68,000 நெருங்கும் என்றுஅஞ்சப்படுகிறது.
யூசுப் கல்லா நிருபர்களிடம் பேசுகையில், 30,000 இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தீவிரபாதிப்புக்குள்ளான பல பகுதிகளுக்கு மீட்புக் குழுவினரால் போக முடியவில்லை. எனவே பலி எண்ணிக்கை 40,000த்தை எட்டக்கூடும்.
மேலும் 500,000 பேர் காயமடைந்துள்ளனர். சடலங்களை மொத்தமாகப் புதைக்கும் பணியை இன்று தொடங்கவிருக்கிறோம் என்றுகூறினார். நாட்டின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் தான் அதிகபட்சமாக சேதம் விளைந்துள்ளது என்றார்.
இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்:
இந்தோனேஷியாவில் ஜகார்தாவிலும் மேடனிலும் உள்ள 5,000 இந்திய வம்சாவளியினரும், 500 இந்திய சுற்றுலாப் பயணிகளும்பாதுகாப்பாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையில் தான் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு 21,715 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் வட கிழக்கில் தான் அதிக சேதம் நேர்ந்துள்ளது.
தமிழகத்தில் 7,500 பேர் பலியாகியுள்ளனர். இதில் நாகப்பட்டிணத்தில் மட்டுமே 4,000க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளன.
பாண்டிச்சேரியில் சுமார் 500 பேரும், கேரளாவில் 180 பேரும் ஆந்திராவில் 96 பேரும் பலியாகியுள்ளனர்.
அந்தமானில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 3,000 பேரைக் காணவில்லை.
தாய்லாந்தில் 1,500 பேரும், மியான்மாரில் 90 பேரும், மலேசியாவில் 65 பேரும், மாலத்தீவுகளில் 55 பேரும் உயிரிழந்துள்ளனர்.தாய்லாந்தில் இரு இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.