நிவாரண பணிகளில் பெரும் குழப்பம்
சென்னை:
நிவாரணப் பணிகளில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆனால் இதில் பெரும் குளறுபடி காணப்படுகிறது. சரியான ஒருங்கிணைப்பு, திட்டமிடுதல் இல்லாதகாரணத்தால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில், அரசு நிறுவனங்களும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி பல்வேறு வகையான உதவிகளைபாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளோருக்கு வழங்கி வருகின்றனர். இவற்றில் பெரும்பாலும் சாப்பாட்டுப்பொட்டலங்கள்தான் அதிக அளவில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஏகப்பட்ட பேர் சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வாகனங்களில் வந்து விநியோகிப்பதால், ஒவ்வாருவருக்கும்நான்கு அல்லது ஐந்து பொட்டலங்கள் வரை கிடைக்கின்றன. இதனால் பல பேர் சாப்பிட முடியாமல் கீழே போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக ஏராளமான சாப்பாடு வீணாகிறது.
பட்டினப்பாக்கம் பகுதியில் சில தனியார்கள் பிரியாணி பொட்டலங்களை விநியோகித்தனர். இதனால் மற்றஉணவுப் பொட்டலங்கள் வேண்டாம் என்று கூறிய மீனவர்கள், பிரியாணிப் பொட்டலங்களை வாங்க கடும்போட்டியில் ஈடுபட்டனர். இதனால் சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதத்துடன் வந்தவர்கள்ஏமாற்றமடைந்தனர்.
இதேபோல எங்கு பார்த்தாலும் சாப்பாடு மட்டுமே அதிக அளவில் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பனியைத்தாங்கும் வகையிலான உடைகளோ, கம்பளியோ அதிக அளவில் விநியோகிக்கப்படவில்லை.
பெரும்பாலான மக்கள் வெட்ட வெளிகளில்தான் இருக்கின்றனர். இவர்களுக்கு சரியான படுக்கை வசதியோ,உடைகளோ இல்லை. உடுத்திய உடையுடன் அவர்கள் கடந்த 3 நாட்களாக கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இதேபோல தொற்று நோயைத் தடுப்பதற்கான மருந்துகளும் சரியான முறையில் விநியோகிக்கப்படவில்லை. பலசிறு குழந்தைகள் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றன. இந்தக் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு எந்தத் தொண்டு நிறுவனமோ அல்லது அரசோ, தற்காலிக மருத்துவ முகாம்களை இப்பகுதியில்அமைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
சென்னையில் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் உதவி புரிய வருவோர் கூட்டம்கட்டுக்கடங்காமல் உள்ளது. இப்பகுதி முழுவதும் பெரும் கூட்டம் காணப்படுகிறது. இந்தக் கூட்டத்தைஒழுங்குபடுத்தும் பணியில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் இதர பகுதியிலும் இதே குழப்ப நிலைதான் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும்அதிருப்தி அடைந்துள்ளனர்.