சுனாமி அலையால் மீன் விற்பனை படு வீழ்ச்சி
சென்னை - திருப்பூர்:
வைரஸ் பரவும் என்ற பீதியால் சென்னை உள்பட கடலோர நகரங்களில் மீன் விற்பனை படு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சுனாமி தாக்குதலால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கடல் கொந்தளிப்புகாரணமாக மீன்கள் மூலம் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக செய்திகள் கிளம்பியுள்ளன.
இதனால், மீன் விற்பனை படு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மீன் வாங்க பொதுமக்கள் முன்வரவில்லை. இதனால் கடல் மீன்களின் விற்பனைநொடித்துப் போயுள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
வழக்கமாக 1 கிலோ வஞ்சிரம் மீன் ரூ. 200 வரை விற்கும். ஆனால் இப்போது வெறும் ரூ. 50க்கு கொடுப்பதாகக் கூறினாலும் யாரும்வாங்க முன்வர மாட்டேன் என்கிறார்களாம்.
மீன்கள் மூலம் வைரஸ் பரவும் என்ற தகவலை விஞ்ஞானிகள் உறுதி செய்யவில்லை.என்றாலும் மீன் விற்பனை சுத்தமாக படுத்து விட்டது.கடல் கொந்தளிப்பு, சுனாமி, வைரஸ் பீதி ஆகியவை அடங்கிய பின்தான் மீன் விற்பனை மீண்டும் சூடு பிடிக்கும் என்கிறார்கள்வியாபாரிகள்.
திருப்பூர் தொழிலதிபர்களின் சோகம்:
இதற்கிடையே திருப்பூரைச் சேர்ந்த பல பின்னலாடைத் தொழிலதிபர்கள் பல்வேறு நாடுகளுக்கும் கப்பல்கள் மூலம் அனுப்பிய ரூ. 40 கோடிமதிப்புள்ள ஆடைகளின் கதி என்ன என்று தெரியவில்லை.
சுனாமி அலைகள் தாக்குதலால் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் மாண்டு போன சோகம் ஒரு புறம் இருக்க, திருப்பூர் தொழிலதிபர்கள்வேறு ஒரு சோகத்தில் உள்ளனர்.
திருப்பூரில் உள்ள பல்வேறு பின்னலாடை தொழில் நிறுவனங்களிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் கப்பல்கள் மூலம் ரூ. 40 கோடிவரையிலான ஆடைகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டிருந்தன. அந்தப் பொருட்கள் ஒன்று கூட குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச்சேரவில்லை என்று கூறப்படுகிறது.
சுனாமி பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள அனைத்துத் துறைமுகங்களும் தற்போது செயலிழந்துள்ளன. இதனால் நாங்கள் அனுப்பியஆடைகள் எங்கு போய்ச் சேர்ந்தன என்பதை அறிய முடியாமல் பரிதவித்து வருகிறோம் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
மீண்டும் சுனாமி தாக்குதல் வரலாம் என்ற எதிர்பார்ப்பால் தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைமுகங்கள் தங்களதுபணிகளை நிறுத்தி வைத்துள்ளன. துறைமுகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ. 40 கோடி மதிப்புள்ள ஆடைகளின் கதிபெரும் கேள்விக்குறியாக உள்ளது.