இந்தோனேஷியாவில் மட்டும் பலி 80,000?
ஜகார்த்தா:
கடல் கொந்தளிப்பினால் இந்தோனேஷியாவில் மட்டும் 80,000 பேர் பலியாகியிருக்கக் கூடும் என்று யுனிசெஃப் அமைப்பு அச்சம்தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷிய கடல் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து கடல் கொந்தளிப்பு உண்டானது.இதில் தெற்காசியா முழுவதும் 84,000 பேர் பலியாகினர்.
இந்தோனேஷியாவில் 52,000 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரி காரிடினோ தெரிவித்தார். ஆனால் 80,000 பேர்பலியாகியிருக்கக் கூடும் என்ற அதிர்ச்சித் தகவலை யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது. இந்தத் தகவல் உண்மையானால் தெற்காசியாமுழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 1.2 லட்சத்தை எட்டிவிட்டும்.
இங்கு அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.பெட்ரோல் நிரப்புவதற்காக ஆம்புலன்ஸ் வண்டிகள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை இங்குஉள்ளது.
சபாநாயகர் வேண்டுகோள்:
இதற்கிடையே இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைத் தலைவர்களும், எம்.பிக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்துபாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தலா ரூ.11 லட்சம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாநிலங்களவைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் கூட்டாக விடுத்தஅறிக்கையில்,
எம்.பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். அது மட்டுமல்லாது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.11 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இருவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பேரழிவு நிவாரண ஆணையம்:
இந் நிலையில் இயற்கை சீற்றங்களின்போது உடனடி மீட்பு, நிவாரணம் நடவடிக்கைகள் எடுக்க வழி செய்யும் வகையில் தேசிய பேரழிவுநிவாரண ஆணையம் ஒன்றை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறினார்.
மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல் இது குறித்து மேலும் கூறியதாவது:
உடனடி நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும், நிவாரண நிதி எப்படி செலவழிக்கப்பட வேண்டும்என்பது தொடர்பாகவும் அந்த ஆணையம் மாநில அரசுகளுக்கு விளக்கும்.
தேசிய பேரழிவை எதிர்கொள்ள, அரசியல் சட்டத்தில் திருத்தம் எதுவும் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.
மோசமாகப் பாதிப்படைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கூடுதல் துணைராணுவத்தினரை அனுப்பியுள்ளது. அந்தத் தீவுகளில் கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஏராளமான ஹெலிகாப்டர்களும்விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சடலங்கள் உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன. சுத்தம் செய்யப்பட்ட குடிநீரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.